Strictly No! எஸ்.பி.பி குரலை ஏ.ஐ செய்ய அனுமதி கேட்டு யாரு வந்தாலும் இதுதான் பதில்..எஸ்.பி. சரண் ஓபன்
சென்னை: அறிவியல் உலகம் வளர வளர சினிமா உலகிலும் பல தொழில்நுட்பங்கள் அறிமுகமாகிக் கொண்டே உள்ளது. குறிப்பாக ஏ.ஐ. தொழில் நுட்பம் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், மறைந்த திரைத்துறையினர் நடித்துள்ளதைப்போல், பாடியுள்ளதைப்போல், பேசியுள்ளதைப்போல் பல படங்களில் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. கடைசியாக வெளியான வேட்டையன் படத்தில் கூட மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவன் பாடியிருப்பதைப்போல் மனசிலாயோ பாடல் அமைந்திருக்கும். இந்நிலையில் ஏ.ஐ தொழில்நுட்பம் குறித்து மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியனின் மகன் எஸ்.பி சரண் தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் மூலம், மறைந்த நடிகர்கள், பாடகர்கள் மீண்டும் நடிப்பதைப்போலவும், பேசுவதைப்போலவும், பாடுவதைப்போலவும் பல காட்சிகள் சினிமாக்களில் குறிப்பாக தமிழ் சினிமாக்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையிலும், மறைந்த கலைஞர்கள் மீது இருக்கக்கூடிய அபரிமிதமான அன்பினாலும் இதுபோல் செய்யப்படுகின்றது.

விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான கோட் படத்தில் கூட, மறைந்த நடிகர் விஜயகாந்த் நடித்துள்ளதைப்போல் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. அதேபோல், அதே படத்தில் மறைந்த பாடகி பவதாரிணி பாடியுள்ளதைப்போல் ஒரு பாடல் இடம் பெற்றது. இதனை ரசிகர்கள் கொண்டாடினர். தமிழ் சினிமாவில் முதல் முதலில் ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு பாடகர் பாடல் பாடியுள்ளதைப்போல் உருவாக்கப்பட்ட பாடல் என்றால் அது, பாம்பா பாக்யா குரலில் லால் சலாம் படத்தில் இடம் பெற்ற பாடல்தான். '
சரண்: அதன் பின்னர் கோட் மற்றும் வேட்டையன் படங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்படியான நிலையில், மறைந்த பாடகரின் மகனும் பாடகருமான எஸ்.பி. சரண் தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. அதாவது, ஏ.ஐ. வந்த பின்னர் யாரு வேண்டுமானாலும் யார் இசையில் வேண்டுமானாலும் எந்த மாதிரியான பாடலை வேண்டுமானாலும் பாடலாம் என்ற நிலை வந்துவிட்டது.

வாய்ப்பு: இறந்து போனவர்கள் மீது இருக்கும் அன்பினால் இதைச் செய்கின்றோம், எடுத்துக்காட்டுக்காக கூறுகின்றேன், யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் இல்லை. வேட்டையன் படத்தில் மனசிலாயோ பாடலை அப்பா பாட வாய்ப்பு வந்திருந்தால், ஒருவேளை அவர் அதனை மறுத்திருக்கலாம். ஆனால் ஏ.ஐ. வந்த பின்னர் நாம் இப்படியான வாய்ப்பினை பாடகருக்கு கொடுக்க மறுக்கின்றோம். அதேபோல் வாசுதேவன் சார் முன்பு பாடிய பாடல்கள் காலத்தால் அழிக்க முடியாதவையாக மாற காரணமே, உணர்வுகளோடு பாடியதுதான்.
முடியாது: ஏ.ஐ., மூலம் குரலைத்தான் ரீ-கிரியேட் செய்ய முடியும் உணர்வுகளைக் கொண்டு வர முடியாது. அப்பாவின் குரலை ஏ.ஐ., செய்து கொள்கின்றோம் எனக் கேட்டு பலர் வருகின்றனர். ஆனால் நான் அனைவருக்கும் முடியாது எனச் சொல்லிவிடுகின்றேன்" எனக் கூறியுள்ளார். இவரது கருத்தும் சரிதான் என பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











