SPB: மறைந்த பாடகர் எஸ்.பி.பி பெயரில் சாலை.. ரசிகர்களுக்கு கிடைத்த அங்கீகாரம் என சரண் நெகிழ்ச்சி!
சென்னை: இந்திய சினிமாவின் அடையாளமாக இருந்தவர் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி கொரோனா பெருந்தொற்று காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவு கோடிக்கணக்கான ரசிகர்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியது. தமிழ் நாடு முழுவதும் உள்ள பெரிய நகரங்கள், சிறு நகரங்கள், கிராமங்கள் என அனைத்து பகுதிகளிலும் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிலையில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பெயரில், சாலை திறக்கப்பட்டுள்ளது.
சாலையின் பெயர் பலகையை திறந்து வைத்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், " இந்திய திரையுலகின் ஆற்றல்மிகு அடையாளம். 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடிய 'பாடும் நிலா'. மறைந்த பின்னணி பாடகர் திரு.எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாரின் பெயரை, அவர் வாழ்ந்த நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள காம்தார் நகர் முதன்மை சாலைக்கு சூட்ட வேண்டும் என்று அவருடைய குடும்பத்தார் - ரசிகர்கள் கோரிக்கை விடுத்திருந்தார்.

எஸ்.பி.பி: அதை நிறைவேற்றும் வகையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் , காம்தார் நகர் முதன்மை சாலைக்கு 'எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாலை' என்று பெயர் சூட்ட உத்தரவிட்டார்கள். அதற்கான அரசாணை சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில், 'எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாலை'க்கான வழிகாட்டி பலகையை நுங்கம்பாக்கத்தில் திறந்து வைத்தோம். எஸ்.பி.பி.சாரின் திருவுருவப்படத்துக்கு மரியாதை செய்து, அவரின் குடும்பத்தாருக்கு நினைவுப் பரிசினை வழங்கினோம். காற்றில் கானமாக வாழ்ந்து கொண்டிருக்கும் SPB சாரின் புகழ் ஓங்கட்டும்!" என பதிவிட்டுள்ளார்.

அங்கீகாரம்: இந்நிலையில் இது தொடர்பாக, எஸ்.பி. பாலசுப்ரமணியன் மகன் எஸ்.பி.பி. சரண் பேசும்போது, இது எங்களுக்கு, எங்கள் குடும்பத்தினருக்கோ கிடைத்த அங்கீகாரம் என நான் கூற மாட்டேன். எஸ்.பி.பி. ரசிகர்களுக்கு கிடைத்த அங்கீகாரம். அப்பாவுக்கு ஒரு நினைவிடம் கட்டி வருகிறோம். அங்கு போனால் அவரது புகைப்படங்கள் தொடங்கி, அவர் வாங்கிய விருதுகள் வரை அனைத்தும் பார்க்கலாம். இது எல்லாம் அவரது ரசிகர்களுக்காக தான் செய்து வருகிறோம். எனது அப்பாவுக்கு தான் இது நடக்கிறது என நாங்கள் உரிமை கொண்டாடியது இல்லை. இது எல்லாம் அவரது ரசிகர்களால் தான் நடக்கிறது. அவரது பாடலை விரும்பாதவர்கள் என யாருமே இருக்க மாட்டார்கள். அப்பாவின் பாடலை அனைத்துக் கட்சிக் காரர்களுமே விரும்புவார்கள்.

மகிழ்ச்சி: இந்த சாலைக்கு அப்பாவின் பெயரை வைத்தது மகிழ்ச்சி. இந்த சாலையில் அவர் வாக்கிங் சென்றுள்ளார். நாங்கள் கிரிக்கெட் விளையாடும் போது மாடியில் நின்று கொண்டு அம்பயரிங் செய்துள்ளார். கால்வாய் அடைத்துக் கொண்டால் கூட நானும் அப்பாவும் சேர்ந்து அடைப்பு எடுத்து விட்டுள்ளோம். இந்த ஏரியாவே அப்பாவுக்கு மிகவும் பிடிக்கும். மிகவும் பாதுகாப்பானதும் கூட, அதனால்தான் நாங்கள் வேறு எங்கும் செல்லவில்லை" என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.



Click it and Unblock the Notifications











