நடிகர் கிருஷ்ணாவை தேடிப்பிடித்த தனிப்படை.. போதைப் பொருள் விவகாரத்தில் தீவிர விசாரணை
சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகர் கிருஷ்ணா தமிழ் சினிமாவில் ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக கடந்த ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான ஜோஷ்வா இமை போல் காக்க படத்தில் நடித்திருந்தார். நடிகர் ஸ்ரீகாந்தை தொடர்ந்து கிருஷ்ணாவுக்கும் போதைப் பொருள் விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது கிருஷ்ணாவை தேடிப்பிடித்த தனிப்படை போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தயாரிப்பாளர் கே. கே. சேகரின் மகன் தான் கிருஷ்ணா என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் தான். மேலும், பில்லா படத்தை இயக்கிய இயக்குநர் விஷ்ணுவர்தனின் சகோதரர் தான் கிருஷ்ணா. 47 வயதாகும் கிருஷ்ணா படப்பிடிப்புக்காக கேரளாவில் இருந்த நிலையில், அவருக்கு சம்மன் அனுப்பட்டது. ஆனால், அதற்கு கிருஷ்ணா எந்தவொரு ரெஸ்பான்ஸும் செய்யாத நிலையில், அவரை தேடிப் பிடிக்க தனிப்படை போலீஸார் கேரளாவுக்கு விரைந்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், நடிகர் கிருஷ்ணாவை தனிப்படை தேடிப் பிடித்து தற்போது அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும், அவரிடமும் ரத்த மாதிரிகளை எடுத்து சோதனை மேற்கொள்ளப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஸ்ரீகாந்த் போல இவரும் போதைப் பொருள் பயன்படுத்தியது தெரிய வந்தால் கைதாவார் என்கின்றனர்.
கழுகு பட ஹீரோ: மணிரத்னம் இயக்கத்தில் அஞ்சலி, இருவர் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த கிருஷ்ணா, 2008ம் ஆண்டு வெளியான அலிபாபா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பின்னர், அவர் நடிப்பில் வெளியான கழுகு திரைப்படம் அவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஹீரோ அந்தஸ்த்தை பெற்றுத் தந்தது. யாமிருக்க பயமே, வானவராயன் வல்லவராயன், வன்மம், யட்சன், யாக்கை, பண்டிகை, மாரி 2, கழுகு 2, ராயர் பரம்பரை, ஜோஷ்வா இமை போல் காக்க உள்ளிட்ட படங்களீல் நடித்துள்ளார்.
ஸ்ரீகாந்த் கைது: கொக்கைன் போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்த்திடம் ரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், அவர் போதைப் பொருள் உட்கொண்டது தெளிவான நிலையில், அவரை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். பிரசாத் என்பவரை முன்னதாக கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட நிலையில், அவர் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா உள்ளிட்ட பிரபல நடிகர்களின் பெயர்களை வாக்குமூலமாக கொடுத்துள்ளார். ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக கிருஷ்ணாவும் சிக்கியுள்ளார்.
கிருஷ்ணவிடம் விசாரணை: கேரளாவில் படப்பிடிப்புக்காக கிருஷ்ணா சென்றிருந்ததாக கூறப்பட்டது. ஆனால், போலீசாருக்கு அவர் ஒத்துழைப்பு அழைக்காமல் தலைமறைவாகி விட்டார் என தகவல்கள் வெளியான நிலையில், அவரை தேடிப்பிடிக்க விரைந்த தனிப்படை தற்போது கிருஷ்ணாவை கண்டுபிடித்து ரகசியமான இடத்தில் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











