"கபாலி" வெற்றிக்காக காலபைரவர் சித்தர் பீடத்தில் வழிபட்ட "கலைப்புலி"
தூத்துக்குடி: கபாலி படத்தின் வெற்றிக்காக தூத்துக்குடி கோரம்பள்ளம் அருகே உள்ள காலபைரவர் சித்தர் பீடத்தில் படத் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு சிறப்பு வழிபாடு செய்து வழிபட்டார்.
கபாலி படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில் படம் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.
கபாலி படத்துடன் சேர்த்து எந்திரன் 2ம் பாகத்திலும் ரஜினி நடித்து வருகிறார். இந்த நிலையில்தான் கபாலி பட வெற்றிக்காக கலைப்புலி தாணு கடவுளை நாடத் தொடங்கியுள்ளார்.

சிறப்பு வழிபாடுகள்...
தூத்துக்குடி கோரம்பள்ளம் அருகேயுள்ள அய்யனடைப்பு சித்தர் நகரில் 11அடி உயரத்தில் எழுந்தருளியுள்ள பிரத்தியங்கிராதேவி, காலபைரவருக்கு அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, தேய்பிறை நாட்களில் யாகம், அபிஷேகத்துடன் கூடிய சிறப்புவழிபாடுகள் நடைபெற்று வருகிறது.

மார்கழி அமாவாசை...
மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு உலகமக்கள் அனைவரும் நலமாக, வளமாக வாழவேண்டி நேற்று ஸ்ரீபிரத்தியங்கிராதேவி-காலபைரவருக்கு சிறப்பு யாக வழிபாடுகள் நடைபெற்றது. கணபதி ஹோமத்துடன் துவங்கிய யாக வழிபாடுகள் சித்தர் பீடத்தின் சுவாமிகள் சற்குரு சீனிவாசசித்தர் தலைமையில் நடைபெற்றது.

கலைப்புலி தாணு...
சிறப்பு யாகத்தில் கலைப்புலி எஸ்.தாணு தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டு ரஜினிகாந்த் நடிப்பில் தான் தயாரித்துள்ள 'கபாலி' திரைப்படம் மிக பிரமாண்டமான வெற்றிபெறவேண்டி சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் சிறப்பு வழிபாடுகளை தாமே முன்னின்று நடத்தினார்.

21 வகை அபிஷேகம்...
அதனைத் தொடர்ந்து பிரத்தியங்கிராதேவி, காலபைரவருக்கு பால், பன்னீர், இளநீர், தேன், சந்தனம், குங்குமம் உட்பட 21 வகையான அபிஷேகம் மற்றும் அலங்கார ஆராதனைகளுடன் கூடிய சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. முடிவில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Click it and Unblock the Notifications











