மும்பையில் இன்று நடிகை ஸ்ரீதேவி இறுதிச் சடங்கு... திரளும் திரையுலகம்!
Recommended Video

மும்பை: துபாயில் மாரடைப்பால் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்குகள் இன்று மும்பையில் அவரது இல்லத்தில் நடக்கிறது.
இதில் இந்தியத் திரையுலகமே திரண்டு வந்து கலந்து கொள்கிறது.

இந்திய சினிமாவின் முடிசூடா ராணியாகத் திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. தமிழகத்தில் பிறந்து தமிழ் சினிமாவில் கோலோச்சிய அவர், எண்பதுகளின் மத்தியில் இந்தி சினிமாவில் கால் பதித்தார். அங்கும் வெற்றி மேல் வெற்றியைக் குவித்த அவர், பாலிவுட்டின் முதல் பெண் சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்தார்.
1997-ல் போனி கபூரைத் திருமணம் செய்த பிறகு நடிப்பிலிருந்து விலகிய ஸ்ரீதேவி, 2012-ல் மீண்டும் நாயகியாகவே நடிக்க ஆரம்பித்தார். இப்போதும் ஆண்டுக்கு ஒரு படம் என்ற கணக்கில் நடித்துக் கொண்டிருந்தார்.
நேற்று முன்தினம் உறவினர் ஒருவரின் திருமணத்துக்காக துபாய் சென்றிருந்தபோது, மாரடைப்பால் காலமானார் ஸ்ரீதேவி. அவரது இந்த திடீர் மறைவு இந்தியத் திரையுலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மறைந்த ஸ்ரீதேவியின் உடல் எம்பாமிங் செய்யப்பட்டு துபாயிலிருந்து மும்பைக்கு எடுத்துவரப்பட்டது. அங்கு அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு, பகல் 12 மணிக்குப் பின் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்தியத் திரையுலகமே மும்பைக்கு திரண்டு வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் இன்று இறுதிச் சடங்கில் நேரடியாகப் பங்கேற்கிறார். நடிகர்கள் அமிதாப்பச்சன் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











