ட்ரோல் பண்ணா எனக்கு என்ன.. இந்த மூஞ்ச பாத்துத்தான் ஆகணும்..தினசரி ஹீரோயின் நெத்தியடி பதில்!
சென்னை: இசைஞானி இளையராஜா இசையில், சிந்தியா புரொடக்ஷன் ஹவுஸ் தயாரிப்பாளர் சிந்தியா லூர்தே கதாநாயகியாக நடித்துள்ள திரைப்படம் தினசரி. ஜி சங்கர் இயக்கி இருக்கும் இப்படத்தில், ஸ்ரீகாந்த், எம்.எஸ்.பாஸ்கர், மீரா கிருஷ்ணன், வினோதினி, எம்.ஆர்.ராதாரவி, பிரேம்ஜி, சாம்ஸ், கே.பி.ஒய்.சரத், சாந்தினி தமிழரசன் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் இருந்து தேடி தேடி நான் கண்டேன் என்ற பாடல் வெளியான போது சிந்தியா லூர்தேவை இணையவாசிகள் கடுமையாக ட்ரோல் செய்தனர்.
அதுமட்டுமில்லாமல், ரோஜா கூட்டம், பார்த்திபன் கனவு என எப்பேர்பட்ட படத்தில் நடித்த ஸ்ரீகாந்திற்காக இந்த நிலைமையான அவரையும் கிண்டலடித்தனர். இதனால், கடுப்பான ஸ்ரீகாந்த், தயவுசெய்து பாகுபாடு பார்ப்பதை நிறுத்துங்கள். நம் மனதில் இனவெறி அதிகமாக உள்ளது, நாம் இனவெறி பிடித்தவர்களாக இருக்கிறோம். மற்றவர்களை பாடி ஷேமிங் செய்து மகிழ்கிறோம். தயவுசெய்து அதை செய்யாதீர்கள், அது மிகவும் மோசமான செயல். மற்றவர்களிடம் கொஞ்சம் அன்பு காட்டினால் நன்றாக இருக்கும் என கூறியிருந்தார்.

தினசரி திரைப்படம்: இதையடுத்து தினசரி திரைப்படம் இன்று தியேட்டரில் வெளியானதை அடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய,தயாரிப்பாளரும் படத்தின் கதாநாயகியுமான சிந்தியா லூர்தே, படத்தில் நல்ல கருத்தை சொல்லி இருக்கிறோம் படம் நன்றாக வந்துள்ளது. படம் பார்த்த போது மனதிற்கு நிறைவாக இருந்தது. இந்த படத்தில் பல சீனியர்கள் நடித்து இருக்கிறார்கள், அவர்களுக்கு என் மனமார்த்த நன்றி, ஸ்ரீகாந்த் படத்தின் ப்ரோமோஷனுக்காக சென்று இருப்பதால் இன்று வரமுடியவில்லை மற்றபடி படம் நன்றாக இருக்கிறது என்றார்.
நடிகை சிந்தியா பேட்டி: இதைத்தொடர்ந்து செய்தியாளர் ஒருவர், பாடல் வெளியான போது உங்களை மோசமாக ட்ரோல் செய்தார்கள், அப்போது, உங்களின் மனநிலை எப்படி இருந்தது என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த, சிந்தியா, என்னை ரோல் செய்யும் போது எனக்கு ஜாலியாக இருந்தது. அதை நான் மிகவும் ரசித்தேன். ஏனென்றால், என்னை யார் என்றே தெரியாமல் இருந்தது. அப்போது அந்த நேரத்தில், தினசரி படத்தின் பாடல் வெளியாகி, எந்தவித ரெஸ்பான்ஸ் இல்லாமல் இருந்தது. அப்போது தான், என்னை குறித்து நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தன. நெகட்டிவோ, பாசிட்டிவோ ஏதோ ஒரு விமர்சனம் என்னை பேச வைத்தது. அந்த விமர்சனத்தின் மூலமாக நான் உலகத்திற்கு தெரிகிறேன்.
டம்மியான ரோல் தான்: புதிதாக ஒரு விஷயம் வரும்போது முதலில் அது குறித்த நெகட்டிவ் விமர்சனம் தான் வரும், நாளடைவில், அது கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து பாசிட்டிவ் விமர்சனங்களாக மாறும். ஆகையால் விமர்சனத்தை பற்றி நான் கவலைப்படவில்லை. நீங்கள் என் முகத்தை பார்த்து தான் ஆக வேண்டும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், இந்த படத்தில் நான் கதாநாயகியாக நடிக்காமல், வேறு ஒரு நடிகையை நடிக்க வைத்திருக்கலாம் என்று கூறி வருகிறார்கள். இந்த திரைப்படத்தில் கதாநாயகிக்கு அவ்வளவாக முக்கியத்துவம் இல்லை. அதனால் வேறு எந்த கதாநாயகிக்கு இந்த ரோலை கொடுத்திருந்தாலும், என்னை டம்மி ஆகிவிட்டீர்கள் என்று தான் சொல்லியிருப்பார்கள். ஆனால், நான் இந்த படத்தில், என்னுடைய படத்தில் டம்மியான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறேன். இதில் எனக்கு வருத்தமே இல்லை. ஹீரோயின் கதாபாத்திரத்தில் நான் டம்மியாக இருந்தாலும், ஒரு தயாரிப்பாளராக நான் வெற்றி அடைத்து இருக்கிறேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சி தான் என்றார் சிந்தியா.


Click it and Unblock the Notifications











