‘லியோ’ இலங்கையில் திரையிட வேண்டாம்.. விஜய்க்கு கடிதம் எழுதிய தமிழ் எம்பிக்கள்.. காரணம் என்ன?
சென்னை: தளபதி விஜய் நடிப்பில் உருவாகி உள்ள லியோ படத்தை இலங்கையில் திரையிட வேண்டாம் என இலக்கை தமிழ் எம்பிக்கள் விஜய்க்கு கடிதம் எழுதி உள்ளனர்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ படத்தில் முன்னணி நட்சத்திரங்களான விஜய், த்ரிஷா, அர்ஜூன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், சாண்டி என பலர் நடித்துள்ளனர்.
இந்த படம் நாளை வெளியாக உள்ள நிலையில், லியோ படம் இந்த வாரம் தமிழ்த் திரையுலகில் சாதனை படைக்க உள்ளது.

தளபதியின் லியோ: லியோ படம் தற்போதுவரை ரூ. 70 கோடி மதிப்பிலான டிக்கெட்டுகள் முன்பதிவு நடந்துள்ளதாக, இண்டஸ்ட்ரி டிராக்கர் சாக்னில்க் படத்தின் முன்பதிவு குறித்த விபரங்களை வெளியிடுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே அறிவித்துள்ளார். லியோ ஏற்கனவே முதல் நாள் ரூ 34 கோடிக்கு அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், ரஜினிகாந்தின் ஜெயிலர் சுமார் 18 கோடி ரூபாய் அட்வான்ஸ் வியாபாரம் செய்ததாக சாக்னில்க் தெரிவித்துள்ளது.
விறுவிறுப்பான முன்பதிவு: அதே சமயம் தெலுங்கில் ரவி தேஜாவின் டைகர் நாகேஸ்வர ராவ் மற்றும் பாலகிருஷ்ணாவின் பகவந்த் கேசரி உள்ளிட்ட படங்கள் வெளியானாலும், லியோ தெலுங்கு பதிப்பிற்கு சுமார் ரூ.4 கோடி மதிப்புள்ள டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளதாக டோலிவுட் வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.
இலங்கையில் திரையிட வேண்டாம்: லியோ திரைப்படம் இலங்கையில் திரையிட வேண்டாம் என இலங்கை தமிழ் எம்பிக்கள் நடிகர் விஜய்க்கு கடிதம் எழுதி உள்ளனர். அதில், அன்றைய தினம், நாட்டை விட்டு வெளியேறிய முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு ஆதரவாக போராட்டம் நடத்தப்படவுள்ளது. படம் வெளியானால் போராட்டத்திற்குப் பின்னடைவாக இருக்கும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால், இலங்கையில் லியோ படத்தின் முன் பதிவு டிக்கெட்டுகளை வாங்க ரசிகர்கள் அலைமோதி வருகின்றனர். பல திரையரங்களில் முன் பதிவு தொடங்கிய உடனே டிக்கெட்டுகள் விற்றுதீர்ந்து விட்டதாக சொல்லப்படுகிறது. இதனால், இலங்கை தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களின் கோரிக்கை ஏற்க வாய்ப்பு இல்லை.


Click it and Unblock the Notifications











