SSMB29 Pooja: ரேஞ்ச் ரோவர் காரில் சிங்கமாக வந்த மகேஷ் பாபு.. ராஜமெளலி படத்துக்கு பூஜை போட்டாச்சு!
ஹைதராபாத்: ராஜமெளலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன் நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் 24ம் தேதி ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளியானது. அந்த படம் வசூலில் 1100 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில், ஆஸ்கர் விருது வரை சிறந்த பாடல் மற்றும் இசைக்காக பெற்று வரலாற்று சாதனை படைத்தது.
அந்த படம் முடிந்த உடனே அடுத்ததாக ராஜமெளலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கவுள்ள படம் உருவாகப் போவதாக அறிவிப்புகள் வெளியாகின. அதற்கான ப்ரீ புரொடக்ஷன் பணிகள் மட்டுமே கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த படத்திற்கான பூஜை இன்று போடப்பட்டுள்ளது.

SSMB29 என தற்காலிக டைட்டிலுடன் உருவாகவுள்ள மகேஷ் பாபுவின் 29வது படத்தின் பூஜைக்காக ரேஞ்ச் ரோவர் காரில் மகேஷ் பாபு சென்ற காட்சிகள் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகின்றன.
200 கோடி சம்பளம்: இந்திய சினிமாவில் வேறு எந்தவொரு இயக்குநருக்கும் கிடைக்காத அளவுக்கு அதிகபட்சமாக 200 கோடி ரூபாய் சம்பளத்தை ஷேர் கணக்கில் ராஜமெளலி பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இயக்குநர் ஷங்கர் கேம் சேஞ்சர் படத்துக்கு 50 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என்கின்றனர். அனிமல் படத்துக்கு அதன் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளாராம். இயக்குநர் அட்லீயின் சம்பளமும் சுமார் 80 முதல் 100 கோடியாக உயர்ந்திருப்பதாக கூறுகின்றனர். மகேஷ் பாபுவே இதுவரை 200 கோடி சம்பளம் வாங்காத நிலையில், ராஜமெளலியுடன் இணைந்து அந்த சாதனையை அவரும் விரைவில் படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
600 கோடி பட்ஜெட்: கல்கி 2898 ஏடி, புஷ்பா 2 உள்ளிட்ட படங்கள் இந்திய சினிமாவில் அதிகபட்சமாக 500 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட நிலையில், ராஜமெளலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படத்தின் பட்ஜெட் 600 கோடி என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஹீரோயினாக பிரியங்கா சோப்ரா நடிக்கப் போவதாகவும் ஹாலிவுட் நடிகர்கள் சிலரையும் இந்த படத்தில் ஒப்பந்தம் செய்ய ராஜமெளலி திட்டமிட்டுள்ளதாக கூறுகின்றனர்.
SSMB29 பூஜை போட்டாச்சு: கடந்த 2 ஆண்டுகளாக ராஜமெளலி - மகேஷ் பாபு இணையும் படம் எப்போது ஆரம்பிக்கும் என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நிலவி வந்த நிலையில், அந்த படத்துக்காக பிசிக்கலாக தன்னை தயார்ப்படுத்தி வந்த மகேஷ் பாபு தற்போது அந்த படத்தில் நடிக்கும் பயணத்தை ஆரம்பித்துள்ளாராம். இன்று காலை பிரம்மாண்ட பூஜை போடப்பட்டுள்ளது. SSMB29 பூஜைக்காக மகேஷ் பாபு தனது விலையுயர்ந்த சொகுசு காரான ரேஞ்ச் ரோவரில் சென்ற காட்சிகள் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகின்றன. கூடிய சீக்கிரமே பூஜை போட்டோக்களை அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் ஷூட்டிங் ஆரம்பிக்கப்படும் நிலையில், 2026 தீபாவளிக்கு படம் வெளியாக வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர். அது மிஸ் ஆனால், 2027ம் ஆண்டு பொங்கலுக்கு வர நிறைய வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications











