ராஜமெளலி கிளாப் போர்ட் அடிக்க.. பிரசாந்த் நீல் கேமரா பக்கம் நிற்க.. பிரம்மாண்டமாக தொடங்கியது NTR30!
ஹைதராபாத்: கொரடலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள NTR30 படத்தின் பூஜை இன்று கோலாகலமாக ஹைதராபாத்தில் நடைபெற்றது.
ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்த ஜூனியர் என்டிஆர் இயக்குநர் ராஜமெளலியை இந்த பட பூஜை நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளார்.
மேலும், NTR31 படத்தை இயக்க உள்ள பிரசாந்த் நீலும் பட பூஜை விழாவுக்கு வந்து இருப்பது டோலிவுட் திரையுலகத்தையே மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

NTR30
இயக்குநர் கொரடலா சிவா இயக்கத்தில் அனிருத் இசையில், ரத்னவேல் ஒளிப்பதிவில் உருவாக உள்ள என்டிஆர் 30 படத்தில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் நடிக்க உள்ளார். அந்த படத்தின் பிரம்மாண்டமான பூஜை இன்று போடப்பட்டுள்ளது. அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.

3 இயக்குநர்கள்
இயக்குநர் ராஜமெளலி, கேஜிஎஃப் பட இயக்குநர் பிரசாந்த் நீல் மற்றும் என்டிஆர் 30 இயக்குநர் கொரடலா சிவா என மூன்று பெரும் ஜாம்பவான்களும் இந்த பட பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். டோலிவுட்டின் அடுத்த பிரம்மாண்டமான படைப்பாக என்டிஆர் 30 உருவாக உள்ளதை இந்த ஆரம்ப நிகழ்ச்சியே அறிவுறுத்துகிறது.

பச்சைப் புடவையில் ஜான்வி கபூர்
போனி கபூர் மற்றும் ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் தென்னிந்திய சினிமாவில் சீக்கிரமே அடியெடுத்து வைக்கப் போகிறார் என தகவல்கள் வெளியான நிலையில், என்டிஆர் 30 படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாக உள்ளார். என்டிஆர் 30 பட பூஜைக்கு பச்சை நிற பட்டுச்சேலையை அணிந்து கொண்டு அழகாக ஜான்வி கபூர் வரும் வீடியோ காட்சிகளும், ஜூனியர் என்டிஆர் அருகே அவர் ஜோடி போட்டு நிற்கும் புகைப்படங்களும் வெளியாகி டிரெண்டாகி வருகின்றன.

அனிருத் அசத்தல் என்ட்ரி
ஜூனியர் என்டிஆர் படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவிலும் இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ள அனிருத் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அசத்தல் என்ட்ரி கொடுத்தார். அவரை அன்புடன் அரவணைத்து ஜூனியர் என்டிஆரே அழைத்துச் செல்லும் காட்சிகளும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
கிளாப் அடித்த ராஜமெளலி
என்டிஆர் 30 படத்தை கிளாப் அடித்து தொடங்கி வைத்துள்ளார் இயக்குநர் ராஜமெளலி. அவர் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் கடந்த சில மாதங்களாக கோல்டன் குளோப், ஹாலிவுட் கிரிட்டிக்ஸ் சாய்ஸ் விருதுகள் மற்றும் ஆஸ்கர் என விருதுகளை குவித்து வந்தன. இந்நிலையில், ராஜமெளலி கிளாப் அடித்து அடுத்த படத்தை ஆரம்பிக்க வேண்டும் என தாரக் கேட்டுக் கொண்டதுமே ஓடோடி வந்து விட்டார் ராஜமெளலி.

கேஜிஎஃப் இயக்குநர் பங்கேற்பு
ஒரு பக்கம் பிரம்மாண்ட இயக்குநர் ராஜமெளலி என்றால், இன்னொரு பக்கம் கன்னட இயக்குநர் பிரசாந்த் நீலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று கேமரா முன் நிற்கும் காட்சிகள் ரசிகர்களை கூஸ்பம்ஸ் ஆக்கி உள்ளன. பிரபாஸின் சலார் படத்தை இயக்கி வரும் பிரசாந்த் நீல் ஜூனியர் என்டிஆரின் 31வது படத்தை இயக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











