கோட்டா ஸ்ரீனிவாஸ் இறுதிச்சடங்கில் ரசிகரால் கடுப்பான ராஜமெளலி.. ஒரே தள்ளு தான்.. வைரலாகும் வீடியோ!
ஹைதராபாத்: தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கோட்டா சீனிவாச ராவ் ஜூலை 13ஆம் தேதி ஹைதராபாத் ஃபிலிம்நகர், ஜூப்ளி ஹில்ஸில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். தனது 83வது பிறந்தநாளைக் கொண்டாடி இரண்டு நாட்களே ஆன நிலையில், நீண்டகால நோயால் அவர் உயிரிழந்தார். அவரது மரணம் தெலுங்கு சினிமாவுக்கு ஒரு சகாப்தத்தின் முடிவாக அமைந்தது. ஏனெனில் அவர் தனது பல்துறை நடிப்புத் திறனுக்காக கொண்டாடப்பட்டார்.
அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற பிரம்மாண்ட இயக்குநர் ராஜமெளலியை விடாமல் துரத்தி ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க முயன்ற நிலையில், சில நிமிடங்கள் சிவகுமார் போல கோபத்தில் செல்போனை மட்டுமின்றி அந்த நபரையே பிடித்து தள்ளிவிட்டார் ராஜமெளலி.

துக்க வீட்டில் செல்ஃபி எடுக்கலாமா?: பிரபல திரைப்பட இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி கோட்டா சீனிவாச ராவின் இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அந்த சமயத்தில், வீட்டின் வெளியே ராஜமௌலியுடன் ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க முயன்றதால் அங்கு ஒரு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இத்தகைய துக்கமான தருணத்தில் நடந்த இந்த செயலால் கோபமடைந்த இயக்குனர், அந்த ரசிகரை தள்ளிவிட்டு தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். வைரலான வீடியோவில், எஸ்.எஸ். ராஜமௌலி தனது மனைவி ராமா ராஜமௌலியுடன் ராவின் இல்லத்திலிருந்து வெளியேறுவது பதிவாகியுள்ளது. ரசிகர் ஒருவர் விடாப்பிடியாக அவரை பின்தொடர்ந்து அவரது கார் வரை சென்று செல்ஃபி எடுக்க முயன்றார். இதனால் ராஜமௌலி கோபமடைந்து ரசிகரின் செயலை கேள்விக்குள்ளாக்குவது போல் சைகை செய்தார்.
இறுதிச் சடங்கில் பங்கேற்றவர்கள்: கோட்டா சீனிவாச ராவின் இறுதிச் சடங்கில் தெலுங்கு திரையுலகின் பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். சிரஞ்சீவி, பவன் கல்யாண், பிரகாஷ் ராஜ், வெங்கடேஷ் மற்றும் ராணா டகுபதி போன்ற முக்கிய பிரமுகர்கள் அந்த புகழ்பெற்ற நடிகருக்கு மரியாதை செலுத்த வந்திருந்தனர். அவர்களின் வருகை அவர் மீது அவர்கள் வைத்திருந்த மிகுந்த மரியாதை மற்றும் அபிமானத்தை அடிக்கோடிட்டுக் காட்டியது.
ராஜமெளலி உருக்கம்: கோட்டா சீனிவாச ராவ் அவர்களின் நினைவாக எஸ்.எஸ். ராஜமௌலி எக்ஸ் தளத்தில் ஒரு உருக்கமான குறிப்பை பகிர்ந்துள்ளார். அதில் அவர், "கோட்டா சீனிவாச ராவ் அவர்களின் மறைவு குறித்து கேள்விப்பட்டதும் மிகவும் வருத்தமாக இருந்தது. அவர் தலைசிறந்த கலைஞர், அவர் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் உயிர் கொடுத்த ஒரு ஜாம்பவான். திரையில் அவரது இருப்பு ஈடு இணையற்றது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி" என்று குறிப்பிட்டுருந்தார்.
திரையுலகில் தொடரும் சோகம்: கோட்டா சீனிவாச ராவ் ஜூலை 10, 1942 அன்று ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கான்கிபாடு கிராமத்தில் பிறந்தார். சிரஞ்சீவி நடித்த "பிராணம் கரீடு" என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் 1978 ஆம் ஆண்டு தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். பல ஆண்டுகளாக, அவர் பல்வேறு மொழிகளில் 750 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்த ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஆழத்தையும் நம்பகத்தன்மையையும் சேர்த்ததால், சினிமாவுக்கு அவர் செய்த பங்களிப்பு இணையற்றது. தமிழில் சீயான் விக்ரமுடன் சாமி, விஜய்யுடன் திருப்பாச்சி உள்ளிட்ட படங்களில் நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தவர். கார்த்தி, சந்தானம் நடித்த ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் சந்தானத்துடன் இணைந்து காமெடி கதாபாத்திரத்திலும் கலக்கியிருப்பார். சமீபத்தில், உடல்நலக்குறைவாக அவர் ஆளே அடையாளம் தெரியாத நபராக இருந்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்த நிலையில், தற்போது அவரது மறைவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. கோட்டா சீனிவாச ராவ், சரோஜா தேவி என தொடர்ந்து பழம்பெரும் நடிகர்கள் மறைந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











