ஷங்கரை தொடர்ந்து பாகுபலி இயக்குநருக்கு வந்த பிரம்மாண்ட சிக்கல்.. என்ன செய்யப் போகிறார் ராஜமெளலி?
சென்னை: பாகுபலி இயக்குநர் ராஜமெளலி தற்போது பிரம்மாண்டமாக இயக்கி வரும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், சமுத்திரகனி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது ஆர்.ஆர்.ஆர் படம்.
இந்த படம் வரும் ஜூன் 30ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகும் என்ற தகவல் வைரலாகி வருகிறது.

இந்திய சினிமாவின் பெருமை
டோலிவுட் இயக்குநரான எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பல மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியான பாகுபலி திரைப்படம் இந்தியாவின் முதல் 1500 கோடி வசூல் படம் என்ற பெருமையை பெற்று உலகளவில் இந்திய சினிமாவின் மார்க்கெட்டை உயர்த்தியது.

எக்கச்சக்க எதிர்பார்ப்பு
பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களையும் பார்த்து வியந்த இந்திய சினிமா ரசிகர்கள், ராஜமெளலி இயக்கத்தில் அடுத்து உருவாகி வரும் ஆர்.ஆர்.ஆர் படத்திற்காக எக்கச்சக்க எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

அதே பிரச்சனை
2.0 இயக்கும் போது இயக்குநர் ஷங்கருக்கு வந்த அதே பிரச்சனை தற்போது ராஜமெளலிக்கும் வந்துள்ளது. ஜூன் 30ம் தேதி ஆர்.ஆர்.ஆர் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு படம் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போயுள்ளது.
என்ன சிக்கல்
பிரம்மாண்ட படம் என்றாலே மேக்கிங்கில் பல கால தாமதங்கள் ஆவது இயல்பு தான். அவதார் படம் இயக்கி வரும் ஜேம்ஸ் கேமரூனுக்கே அவதார் படத்தின் அடுத்த பாகத்தை ரிலீஸ் செய்ய 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் எனும் சிஜி தொழில்நுட்பத்துடன் காட்சிகள் அமைக்கப்படுவதால், அதன் நேர்த்திக்காக காலதாமதம் ஆகியுள்ளதாம்.
கே.ஜி.எஃப் சேப்டர் 2
அதேசமயம் கன்னட நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வரும் கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஜூன் மாதம் திரைக்கு வரவுள்ளதால், அந்த படத்துடன் போட்டிப் போடுவதைத் தவிர்க்கத் தான் இயக்குநர் ராஜமெளலி இப்படியொரு முடிவெடுத்துள்ளார் என கே.ஜி.எஃப் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

வியாபார யுக்தி
அதுமட்டுமின்றி ஜூன் 30ம் தேதிக்கு பதிலாக அக்டோபர் மாதம் வரும் நவராத்திரி பண்டிகை மற்றும் அதனைத் தொடர்ந்து வரும் தீபாவளி பண்டிகையையும் டார்கெட் செய்து ரிலீஸ் செய்தால் இன்னொரு ஆயிரம் கோடி வசூலை எட்டிப் பிடிக்கலாம் என்ற வியாபார நோக்கமும் இந்த ரிலீஸ் தேதி மாற்றத்தில் இருப்பதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஆனால், இயக்குநர் ராஜமெளலி தரப்பில் இருந்தோ ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினரிடம் இருந்தோ இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











