திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தோல்வி.. மாரி செல்வராஜ் எவ்வளவு வருத்தப்படுறாரு பாருங்க
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் நேற்று ஒருசேர கொடுத்தது. தவெக தலைவர் விஜய் தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்றார். அந்தக் கட்சியும் மொத்தம் 108 தொகுகளில் வென்றது. திமுகவை பொறுத்தவரை 73 தொகுதிகளில் வென்றிருக்கிறது. ஆனால் அக்கட்சியின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்துவிட்டார்.
விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு நடந்த முதல் சட்டப்பேரவைத் தேர்தலானது எப்போதும் இல்லாத அளவுக்கு முக்கியத்துவம் பெற்றது. காரணம் விஜய் மட்டும்தான். அவர் விஜயகாந்த் முதல் தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதத்தை முந்திவிடுவாரா; அவரது கட்சி இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை பிடிக்குமா என்றெல்லாம் பலரும் சந்தேகத்தோடு கேள்வி கேட்டார்கள். முக்கியமாக தவெகவினரே சிலரும்கூட இந்த முறை திமுக ஆட்சிதான். அடுத்த முறை கண்டிப்பாக நாங்கள் வென்றுவிடுவோம் என்றுதான் கூறினார்கள்.

பலருக்கும் சர்ப்ரைஸ்: ஆனால் அவர்களுக்கே சர்ப்ரைஸ் தரும் விதமாகத்தான் நேற்றைய தேர்தல் முடிவுகள் வந்தன. விஜய் களமிறங்கிய திருச்சி கிழக்கிலும் பெரம்பூரிலும் வெற்றி பெற்றுவிட்டார். அவரது கட்சியும் மொத்தம் 108 தொகுதிகளில் வென்றிருக்கிறது. பெரும்பான்மைக்கு இன்னும் பத்து எம்.எல்.ஏக்களின் ஆதரவு வேண்டும். கண்டிப்பாக அது கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார்கள் தவெகவினர். நிச்சயம் தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் மாறிவிடுவார் என்றே தெரிகிறது.
மு.க.ஸ்டாலின் தோல்வி: நேற்று விஜய்யும், விஜய் கட்சியும் வென்றது ஆச்சரியம் என்றால்; திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்தது பெரிய அதிர்ச்சி. இத்தனைக்கும் நாகரீக அரசியல் செய்த அவர்; தனது தொகுதிக்கும் ஏகப்பட்ட நல்லதுகளையே செய்திருக்கிறார். அப்படி இருந்தும் அவர் தோற்றிருப்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது. பலரும் அவரது தோல்வியை நினைத்து வருத்தப்படுகிறார்கள். அந்தவகையில் இயக்குநர் மாரி செல்வராஜும் தனது வேதனையை பதிவு செய்திருக்கீறார்.
மாரி செல்வராஜ் பதிவு: அவர் தன் எக்ஸ் பக்கத்தில், "இந்த தேர்தல் முடிவுகள் நிறைய அதிர்ச்சிகளையும் ஆச்சர்யங்களையும் சில நம்பிக்கைகளையும் எனக்கு கொடுத்திருப்பதை போல பெரு வலியையும் கொடுத்திருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் அவர்களின் தோல்வி மனதை பிசைகிறது. அரசியலின் அடிப்படையான சித்தாந்தம், கொள்கை கோட்பாடுகளை தாண்டி மக்கள் திரள் , மக்கள் பிரியம் , மக்கள் விருப்பம் என்பதுதான் தேர்தல் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக வெடித்திருப்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது.
விஜய்க்கு வாழ்த்துகள்: தான் கலந்துகொண்ட முதல் தேர்தலிலே அப்படியொரு பிரியத்தையும் எதிர்பார்ப்பையும் த.வெ.க தலைவர் விஜய் சார் அவர்களுக்கு மக்கள் வழங்கியிருக்கிறார்கள். அதன்படி தமிழ்நாட்டில் புதிய அரசை நிறுவ இருக்கும் திரு. விஜய் சார் அவர்களுக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன். மக்கள் பணி சிறக்கட்டும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications
