வேற வழியில்லை.. ஸ்டார் ஹீரோக்கள் சம்பளத்தை குறைக்க வேண்டியிருக்கும்.. பிரபல தயாரிப்பாளர் உறுதி!
சென்னை: முன்னணி ஹீரோக்கள் தங்கள் சம்பளத்தை குறைக்க வேண்டியது தவிர்க்க முடியாதது என்று தெரிவித்துள்ளார், பிரபல தயாரிப்பாளர்.
கொரோனா வைரஸால் உலக நாடுகள் கடும் பாதிப்பை சந்தித்துவருகிறது. லட்சக்கணக்கானோர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வைரஸுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாததால் பல்வேறு நாடுகள் ஊரடங்கை கடைபிடித்து வருகின்றன.

வாழ்வாதாரம்
இந்த தொற்று இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் அடைந்து கிடக்கின்றனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் நடிகர், நடிகைகளும் வீடுகளுக்குள் இருக்கின்றனர். பல படங்களின் ரிலீஸும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

டாப் ஹீரோக்கள்
இதன் காரணமாக சினிமாவில் முதலீடு செய்யப்பட்ட பலகோடி ரூபாய் முடங்கி உள்ளது. லாக்டவுன் முடிந்து தியேட்டர்கள் திறக்கப்பட்டால் மட்டுமே அதைத் திருப்பி எடுக்க வாய்ப்புள்ளன. இதனால் திரைப்பட தயாரிப்பாளர்கள் கவலையில் உள்ளனர். சினிமா தொழில் கடும் நஷ்டத்தைச் சந்திக்கும் என்பதால், டாப் ஹீரோக்கள் தங்களது சம்பளத்தைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வருகிறது.

குறைக்க வேண்டும்
கேரளாவின் முன்னணி தயாரிப்பாளரான சுரேஷ் குமார், 'சினிமா மீள வேண்டும் என்றால், நடிகர்களும், டெக்னீஷியன்களும் அவர்களது சம்பளத்தில் 50 சதவிகிதத்தைக் குறைக்க வேண்டும்' என்று கடந்த சில நாட்களுக்கு முன் கூறி இருந்தார். இந்நிலையில், தெலுங்கு ஹீரோ வெங்கடேஷின் அண்ணனும் நடிகர் ராணாவின் தந்தையுமான பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவும் அதே கருத்தைத் தெரிவித்துள்ளார்.

தவிர்க்க முடியாது
'இந்த கொரோனா லாக்டவுன் காரணமாக, சினிமாவில் இழப்புகளை தவிர்க்க முடியாது. பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் கூட, தங்கள் ஊழியர்களுக்கான சம்பளத்தைக் குறைத்துள்ளன. அதுபோலதான் சினிமாவிலும். பெரிய நடிகர்கள் தங்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்ற கேட்கப்படலாம்' என்று தெரிவித்துள்ளார். தெலுங்கில் சிரஞ்சீவி தவிர, பிரபாஸ், மகேஷ்பாபு, அல்லு அர்ஜூன், ராம்சரண் தேஜா உட்பட சிலர் முன்னணி ஹீரோக்களாக உள்ளனர்.

கேம் சேஞ்சர்கள்
அதே நேரம் ஓ.டி.டி பிளாட்பார்ம்கள், கோவிட்-19 பிரச்னைக்குப் பிறகு கேம் சேஞ்சர்களாக இருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 'பல நிறுவனங்கள் வீட்டில் இருந்து வேலை பார்க்கும்படி தங்கள் ஊழியர்களிடம் தெரிவித்துள்ளன. இதனால் பலர் ஓ.டி.டியில் படம் பார்க்க பழகிவிட்டார்கள்' என்றும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











