டெம்போ டிரைவர் டூ ட்ரெண்டிங் சிங்கர்.. ஃபகத் பாசில் செய்த ரங்கா ரீல்ஸ்.. கரின்காளி பாடல் உருவான கதை
திருவனந்தபுரம்: ஃபகத் பாசில் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் ஆவேஷம். ஜித்து மாதவன் இயக்கியிருந்த அந்தப் படம் கேங்ஸ்டர் ஜானரில் உருவாகியிருந்தாலும் அதில் ஒரு வித்தியாசம் இருந்தது. அதன் காரணமாக அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. படத்தில் ஏகப்பட்ட காட்சிகள் ரகளையாக இருந்தாலும், ஃபகத் பாசில் ரீல்ஸ் செய்யும் ஒரு காட்சி அதிரிபுதிரி ஹிட். அந்தக் காட்சியில் இடம்பெற்ற பாடல்தான் கரின்காளி பாடல். மலையாளத்தில் வெளியான அந்த ஆல்பம் பாடல் இதுவரை 45 மில்லியன் பார்வைகளை கடந்திருக்கிறது.
உலகம் இப்போது ஸ்மார்ட் ஃபோனுக்குள் அடங்கியிருக்கிறது. முன்பெல்லாம் ஃபேமஸ் ஆக வேண்டும் என்றால் திரைப்பட துறையில் இருக்க வேண்டும் என்ற விதி இருந்தது. ஆனால் அடையாளமோ அங்கீகாரமோ கிடைக்காத கலைஞர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது ஸ்மார்ட் ஃபோன் கலாசாரம். தங்களது திறமைகளை ஒரு யூட்யூப் சேனலிலோ, அல்லது ஒரு ஆல்பம் பாடலாகவோ உருவாக்கி சமூக வலைதளங்களில் வெளியிட்டு ஒரு இரவில் அடையாளத்தையும், அங்கீகாரத்தையும் பெற்றுவிடுகிறார்கள் பலர்.

கரின்காளி: அதேபோல் சமீப காலமாக ஆல்பம் பாடல்களின் கலாசாரமும் பெருகியிருக்கிறது. அந்தவகையில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான ஆல்பம் பாடல்தான் கரின்காளியல்லே. சைஜு அவரான் இசையமைப்பில் கண்ணன் மங்கலாத் வரிகளில் அனூப் புதியெடாத் மற்றும் வினீஷ் குரலில் உருவான அந்தப் பாடல் கொடுங்களூரில் இருக்கும் காளி தெய்வத்தை துதித்து உருவாக்கப்பட்ட பாடலாகும். பக்தி பாடல் ஜானர்தான் என்றாலும் அனைவரையும் கவரும் வகையில் இசை, வரிகள், குரல் என இருந்ததால் சமூக வலைதளங்களில் பயங்கர ட்ரெண்டானது. பலரும் ரீல்ஸ் செய்து சோஷியல் மீடியாவில் பதிவேற்றினர்.
யார் இவர்கள்?: இந்தப் பாடலின் இசையமைப்பாளர் சைஜு அவரான் கேரள மாநிலம் இரிஞ்சலக்குடா என்ற ஊரை சேர்ந்தவர். இவரது தந்தை நாட்டுப்புற பாடல்கள் பாடுவதில் கைதேர்ந்தவர். தந்தையை பார்த்து வளர்ந்ததால் அவரானுக்கும் சிறு வயதிலிருந்தே பாடல்கள் உருவாக்கம் மீது ஆர்வம் பிறந்தது. அதன்படி இசையையும், அனுபவத்தையும் வைத்துக்கொண்டு பல பாடல்களுக்கு உருவாகியிருக்கிறார் சைஜு. அவற்றில் ஒன்றுதான், 'எல்லோலம் தறி பொன்னெண்ட்டினா' என்ற பாடல். அந்தப் பாடல் முழுக்க முழுக்க நாட்டுப்புற ஜானரில் உருவாகியிருந்தது. மேக்கிங்கும் அட்டகாசமாக இருந்ததால் பாடலுக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது.
திரைப்படங்களில் பாடல்கள்: அதன்படி எல்லோலம் பாடல் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான ஜோ & ஜோ படத்தில் பயன்படுத்தப்பட்டது. ஏற்கனவே ஆல்பமாக அந்தப் பாடல் கேரளாவில் மிகப்பெரிய பிரபலமடைந்தது. அதனையடுத்து படத்திலும் அந்தப் பாடல் இடம்பெற்று ஹிட்டடித்ததை அடுத்து சைஜுக்கும் அவரது டீமுக்கும் நல்ல அடையாளம் கிடைத்தது. அந்தப் பாடலுக்கு பிறகு உருவானதுதான் கரின்காளி. இந்தப் பாடலும் ஃபகத் பாசில் நடிப்பில் அண்மையில் வெளியான ஆவேஷம் படத்தில் பயன்படுத்தப்பட்டிருந்தது. இந்தப் பாடலுக்குத்தான் படத்தில் ரங்கா (ஃபகத் பாசில்) ரீல்ஸ் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாடியவரின் கதை: இந்தப் பாடலின் இசைக்கு எவ்வளவு பாராட்டு கிடைத்திருக்கிறதோ அதேபோல் இந்தப் பாடலை பாடியவர்களுக்கும் கிடைத்திருக்கிறது. அனூப் புதியெடாத், வினீஷ் ஆகியோர் இந்தப் பாடலை பாடியிருக்கிறார்கள். இவர்களில் அனூப் ஆட்டோ டிரைவர், வினீஷ் டெம்போ டிரைவர் என்பது கவனிக்கத்தக்கது. இருவருக்கும் சைஜூவுடன் பழக்கம் ஏற்பட்ட பிறகு இந்தப் பாடலை பாடியிருக்கிறார்கள். இவர்களது குரலில் ஒரு பாமரத்தனம் இருப்பதால்தான் அனைவரையும் பாடல் சென்று சேர்ந்தது என்பது பலரது எண்ணம். இவர்களுக்கு திரைப்படங்களிலும் வாய்ப்புகள் கிடைத்திருப்பதாகவும் பரவலாக பேசப்படுகிறது. சைஜு, அனூப், வினீஷ் ஆகிய அனைவருக்குமே மறைந்த நடிகர் கலாபவன் மணி பெரிய இன்ஸ்பிரேஷன். அதனை அவர்களே சில பேட்டிகளில் தெரிவித்திருக்கிறார்கள்.
அடுத்தடுத்த திட்டங்கள்: கரின்காளி பாடல் இதுவரை யூட்யூபில் 45 மில்லியன் பார்வைகளை கடந்து மெகா சாதனை படைத்திருக்கிறது. இதனால் அவர்களது அடுத்த ஆல்பம் குறித்த எதிர்பார்ப்பும் நெட்டிசன்களிடம் எகிறியுள்ளது. அடுத்ததாக அவர்கள் கிருஷ்ணருக்காக ஒரு ஆல்பத்தை செய்யவிருக்கிறார்களாம். பக்தி பாடல் என்றாலே இழுவை, சோகம், அமைதி என்ற நிலையை மாற்றி அதில் ஒரு ஃபோக், கொண்டாட்டத்தை கலந்துகொடுக்கும் இவர்களுக்கு மிகச்சிறந்த எதிர்காலம் இருக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.


Click it and Unblock the Notifications











