ஆங்கிலத்தில் பேசிய கமல்... தமிழ்... தமிழ் என கத்திய மாணவர்கள்... அடுத்த நொடியில் நடந்த ருசிகரம்!
சென்னை: கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்புக்காக சென்னையில் முகாமிட்டுள்ளார்.
ஹைதராபாத், திருப்பதி பகுதிகளில் நடைபெற்று வந்த இந்தியன் 2 ஷூட்டிங், தற்போது சென்னையில் நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சென்னையில் உள்ள புகழ்பெற்ற கிறிஸ்தவக் கல்லூரியில் நடைபெற்ற விழா ஒன்றில் கமல் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
அப்போது ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்த கமல்ஹாசனுக்கு மாணவர்கள் அன்புக் கட்டளை விதித்த ருசிகரமான சம்பவம் வைரலாகி வருகிறது.

படப்பிடிப்பில் பிஸியான கமல்
விக்ரமுக்கு பிறகு இந்தியன் 2 படப்பிடிப்பில் பிஸியாகிவிட்டார் கமல். இடையே பிக் பாஸ் சீசன் 6 உட்பட மற்ற நிகழ்ச்சிகளிலும் கவனம் செலுத்திய கமல், தற்போது அரசியல், சினிமா என இரண்டு பக்கமும் பிஸியாகவே காணப்படுகிறார். ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படப்பிடிப்பு திருப்பதி, ஹைதராபாத் பகுதிகளில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது சென்னையில் நடந்துவரும் இந்தியன் 2 ஷூட்டிங்கில் கமல், ஷங்கர் உள்ளிட்ட மொத்த படக்குழுவும் பரபரப்பாக உள்ளது.

கல்லூரி விழாவில் கமல்
இதனிடையே சென்னையில் உள்ள கிறிஸ்தவக் கல்லூரியில் நடைபெற்ற விழா ஒன்றில், நடிகர் கமல் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மாணவர்களுடன் நடிகர் கலந்துரையாடும் விதமாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது மேடையேறிய கமல் ஆங்கிலத்தில் பேசத் தொடங்கினார். இதனை கேட்ட மாணவர்கள் "தமிழ்... தமிழ்... தமிழ்.." என குரல் எழுப்பினர். உடனடியாக அதனை புரிந்துகொண்ட நடிகர் கமல் "நன்றி... நன்றி" எனக் கூறவும், மொத்த மாணவர்கள் கூட்டமும் ஆர்ப்பரித்தது.

தமிழில் பேச வைத்த மாணவர்கள்
மாணவர்கள் ஆர்வத்தை புரிந்துகொண்ட கமல், "எங்க இன்னொருவாட்டி சொல்லுங்க" எனக் கேட்டதும், மீண்டும் மாணவர்கள் "தமிழ்... தமிழ்.." என உற்சாக கூக்குரல் எழுப்பினர். அதன் பின்னர் தமிழில் பேசிய கமல், மாணவர்களாகிய உங்கள் முன் தனது அனுபவத்தை எடுத்துவைக்க வந்துள்ளேன். உங்களுக்கு விருப்பமும் பொறுமையும் இருந்தால் அதனை கூறுகிறேன் என பேசத் தொடங்கினார்.

நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்
மேலும், எனக்கு அறிவுரை சொல்ல நிறைய பேர் இருந்தும் நான் அதை கேட்காமல் வந்துவிட்டேன். லைஃப்ல உங்க வாழ்க்கைல வரும் எல்லா பாலும் சிக்சர் அடிக்க முடியாது. அதனை சரியாக கணித்து ஆட வேண்டியது உங்கள் பொறுப்பு எனக் கூறினார். அதோபோல் ஒவ்வொருவரின் வாழ்க்கை லட்சியமும் வேறுவேறாக இருக்கும். எனது வாழ்க்கையை என்னுடைய பெற்றோர்கள் முடிவுசெய்யவில்லை. நான் அவர்களுக்காக முடிவு எடுக்கவில்லை, அதேபோல் அவர்களும் என் முடிவில் குறுக்கிடவில்லை. ஆனால், நாம் தேர்ந்தெடுக்கும் பாதை சரியானதாக இருக்க வேண்டும் என்றார்.

எனக்கு அதெல்லாம் பிடிக்காது
தொடர்ந்து பேசிய கமல், எனக்கு கணக்கு, கெமிஸ்ட்ரி, வரலாறு பாடங்கள் பிடிக்காது. ஆனால், அது என் வாழ்க்கைக்கு தேவைப்படும் அளவிற்காவது நான் கற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறினார். இறுதியாக இளம் தலைமுறையினர் அரசியலுக்கு வரவேண்டும் என கூறினார். ஆங்கிலத்தில் பேசத் தொடங்கிய கமல், பின்னர் முழுவதுமாக தமிழில் பேசிமுடித்தது அங்கிருந்த மாணவர்களை மேலும் உற்சாகமாக்கியது. இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











