'விஜய், முருகதாஸ் வீடுகள், லைகா சென்னை அலுவலகத்தை முற்றுகையிடுவோம்!'- மாணவர்கள்
சென்னை: கத்தி படத்துக்கு எதிராக மாணவர்கள் போராட்டங்களை அறிவித்துள்ளனர். இந்தப் படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என்று கோரி படத்தின் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ், நாயகன் விஜய் வீடுகள் மற்றும் சென்னையில் உள்ள லைகா நிறுவனத்தின் அலுவலகங்கள் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.
இன்னும் ஓரிரு நாட்களில் இந்தப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மாணவர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரான செம்பியன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கத்தி படத்துக்கு எதிரான மிக பலமான போராட்டத்தை அனைத்து மாணவர் அமைப்புகளையும் ஒருங்கிணைத்து நடத்தப் போகிறோம்.
நிச்சயம் எங்கள் போராட்ட முடிவில் மாற்றமிருக்காது. இந்த போராட்டம் குறித்து இன்னும் சில தினங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவிருக்கிறோம். மாணவர்களுக்கு தேர்வுகள் முடிய வேண்டுமே என்பதற்காக காத்திருக்கிறோம்.
ஈழ ஆதரவு அமைப்புகள் அனைத்துடனும் இந்தப் போராட்டம் பற்றி பேசி வருகிறோம்.
கத்தி படத்தின் நாயகன் விஜய், இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் ஆகியோரின் வீடுகள், தயாரிப்பாளரான லைகாவின் தி நகர் மற்றும் அடையாறு அலுவலகங்களை முற்றுகையிடுவோம். தமிழகத்தில் இந்தப் படம் எங்குமே வெளியாகக் கூடாது. அதற்கு அனுமதிக்கவும் மாட்டோம்.
தமிழக அரசு இந்த விஷயத்தில் சரியான முடிவை எடுக்கும் என நம்புகிறோம்," என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











