Stunt Master Death: எல்லாமே சரியாத்தான் இருந்துச்சு.. அப்படி இருந்தும்.. இரங்கலோடு பா.ரஞ்சித் விளக்கம்
சென்னை: தமிழ் திரையுலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய சம்பவமாக மாறியது ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் மரணம் தான். இயக்குநர் பா. ரஞ்சித்தின் வேட்டுவம் படத்தின் படப்பிடிப்பின் போது, விபத்துக் காட்சியை படமாக்கிய போது, பரிதாபமாக உயிரிழந்தார். திரைத்துறையைச் சேர்ந்த பலரும் அவரது மரணம் தொடர்பாக இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் வேட்டுவம் படத்தின் இயக்குநர் பா. ரஞ்சித் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஜூலை 13 ஆம் தேதி காலை தமிழ்நாட்டின் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் நடைபெற்று வந்த "வேட்டுவம்" படப்பிடிப்பு தளத்தில், திறமையான சண்டைக் கலைஞரும், எங்களுடன் நீண்ட காலம் பணியாற்றியவருமான திரு. மோகன் ராஜ் அவர்களை நாங்கள் எதிர்பாரா விதத்தில் இழந்தோம். அவரின் மனைவி, குழந்தைகள்,குடும்பம் மற்றும் அவரை சக பணியாளராக, நண்பராக அறிந்த அனைவரையும் தேற்றும் வழியறியாது எங்கள் உள்ளம் கலங்குகிறது.
எப்போதும் போலவே கிராஷ் காட்சியை எடுக்கும் முன்பு செய்யும் தெளிவான திட்டமிடல், பாதுகாப்பு ஏற்பாடுகள், எங்களின் வேண்டுதல்கள், வாழ்த்துக்கள் என எல்லாம் இருந்தன. சண்டைக்காட்சிகளை திட்டமிடுவதில், செயல்படுத்துவதில் தெளிவும், நேர்த்தியும் கொண்டிருந்த நிகரற்ற கலைஞரான அவருடைய வழிகாட்டுதலையும், எங்கள் ஸ்டண்ட் இயக்குனர் திலீப் மாஸ்டரின் விளக்கமான திட்டமிடலையும், பாதுகாப்பு தயாரிப்புகளையும் அனைவரும் பெரிதும் மதித்தோம்; தவறாமல் பின்பற்றினோம்.
சமர்ப்பணம்: ஆனால், அந்த நாள் அண்ணன் மோகன் ராஜ் உயிரழப்பில் முடிந்தது என்பது தாங்கொணா அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. மோகன் ராஜ் அண்ணன் அவர்கள், தன் ஸ்டண்ட் டீம், எங்களது குழு, என அனைவரின் மரியாதையையும், அன்பையும் பெற்றவர். செழுமையான அனுபவமும், சாதனைகளும் கொண்டு தன் நேர்த்தியான வேலையால் தன் குடும்பத்தை, சக ஸ்டண்ட் வீரர்களை, இயக்குனர்களை பெருமைப்படுத்திய கலைஞர் அவர். எங்கள் ஒவ்வொருவரின் மரியாதையும், அன்பும், வந்தனங்களும் என்றென்றென்றும் அவருக்கு சமர்ப்பணம்.
பா. ரஞ்சித் மீது வழக்கு: இது எங்கள் அனைவரையும் உலுக்கியிருக்கும் பேரிழப்பு. ஒரு கணவராக, தந்தையாக, பிரமாதமான சண்டைக் கலைஞராக, நேர்த்தியான மனிதராக வாழ்ந்த மோகன் ராஜ் அண்ணாவின் இறப்பிற்கு எங்களின் ஆழ்ந்த இரங்கல்கள். ஆகச்சிறந்த ஸ்டண்ட் கலைஞராய் அறியப்பட விரும்பிய அவரை என்றும் அப்படியே நாங்கள் நினைவில் போற்றுவோம்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இது மட்டும் இல்லாமல், சில இணையவாசிகள் இயக்குநர் பா. ரஞ்சித்தை சாடியும் கருத்து பதிவிட்டு வருகிறார்கள். ஏற்கனவே விபத்து மற்றும் மோகன்ராஜ் மரணம் தொடர்பாக இயக்குநர் பா. ரஞ்சித் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாரி செல்வராஜ்: அதேபோல் இயக்குநர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில், " சண்டை பயிற்சியாளர் மோகன் ராஜ் அண்ணன் மரணம் என்ற செய்தி இதயத்தில் அதிர்ச்சியையும் வேதனையையும் நிரப்புகிறது. வாழை இறுதிகாட்சியில் நீங்கள் அந்த லாரியை துணிச்சலாக கவிழ்த்து எல்லாரையும் கலங்கடித்த நாட்களை நெஞ்சு படபடக்க இன்று நினைத்துக்கொள்கிறேன். நீங்களும் உங்களின் துணிச்சலும் என்றும் நினைவில் இருப்பீர்கள் அண்ணா" என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











