காரில் கத்தியோடுதான் சுத்துறேன்.. ஆம்ஸ்ட்ராங் மாதிரி என்னையும் கொன்னுட்டா.. ஜாகுவார் தங்கம் பேச்சு!
சென்னை: தமிழ் சினிமாவில் இருக்கும் மூத்த சண்டைப் பயிற்சியாளர் ஜாகுவார் தங்கம். இன்னும் சொல்லப்போனால் தென்னிந்திய சினிமாவில் இருக்கும் மிக மூத்த சண்டைப் பயிற்சியாளர் ஜாகுவார் தங்கம். சிறந்த சண்டைப் பயிற்சியாளர் என்ற விருதினை தமிழக அரசிடம் நான்கு முறை பெற்றுள்ளார். இவர் சமீபத்தில் இரவுப் பறவை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். அது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இரவுப் பறவை படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் மட்டும் இல்லாமல், சிதம்பரம் நாடாளுமன்ற எம்.பி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரான தொல். திருமாவளவன், பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். இந்த படம் இலங்கைத் தமிழர்களின் வாழ்வியலைப் பேசும் படம் என்பதால் இந்த படத்தின் மீது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட மூத்த சண்டைப் பயிற்சியாளர் ஜாகுவார் தங்கம் பேசுகையில், " கடந்த மாதம் 25ஆம் தேதி தி நகர் பகுதியின் ஏ.சி, டி.சி மற்றும் இன்ஸ்பெக்டர் என்னை அழைத்தார்கள். அவர்கள் என்னிடத்தில் ஒரு கடிதத்தைக் காட்டி எனது உயிருக்கு ஆபத்து என்று கூறினார்கள். மேலும், சில நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று கூறினார். எனது உயிருக்கு ஆபத்து என்று கூறுவது போலீஸ், எனக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியதும் போலீஸ்தான்.

டைரியில் குறிப்பு: ஆனால் நான் சாவைக் கண்டு பயப்படவில்லை. காவல்துறையினர் என்னை வெளியே வரவேண்டாம் என்று சொன்னதற்கு, 'காரில் ஆயுதம் வைத்திருக்கிறேன் சார், எவன் வந்தாலும் வெட்டுவேன். நான் தமிழன், தூத்துக்குடி தமிழன். எனக்கு யாரைப் பார்த்தும் பயம் இல்லை. இதை நான் இந்த இடத்தில் ஏன் சொல்கிறேன் என்றால், அத்தனை பேர் பெயரையும் நான் டைரியில் எழுதி வைத்துள்ளேன். யார் யார் என்னை எதிர்க்கிறார்களோ, யார் யார் என்னை கொலை செய்ய முயற்சிக்கிறார்களோ அவர்கள் அனைவரது பெயரையும் நான் எழுதி வைத்துள்ளேன்.
ஆம்ஸ்ட்ராங் மாதிரி: இன்று வெளியூரில் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு வந்ததற்கு காரணம், இதை எனது அண்ணன் திருமாவளவன் முன்னால் சொல்ல வேண்டும் என்பதுதான். ஒருவேளை ஆம்ஸ்ட்ராங் மாதிரி ஆகிவிட்டால்?, போட்டுத் தள்ளி விட்டார்கள் என்றால்? அவ்வளவு எளிதாக என்னைக் கொல்ல முடியாது. ஒருவேளை கொன்றுவிட்டால், திருமாவளவன் அண்ணா, நான் டைரியில் எல்லாம் எழுதி வைத்துள்ளேன். எனக்கு ஒரு ஆபத்து என்றால் நீங்கள் தான் அதை பார்த்துக் கொள்ள வேண்டும்.
பெரிய விலை: எனக்கு வேறு யாரும் இல்லை. எல்லாம் நீங்கதான். என்னை எல்லாம் சும்மா தொட்டு விட்டு போய்விட முடியாது. என்னைத் தொட்டால் அதற்கு பெரிய விலை கொடுக்க வேண்டி இருக்கும். நான் உணர்ச்சிவசப்பட்டு பேசுகிறேன் என்று நினைக்கிறேன்" என்று பேசியுள்ளார். அவரது இந்த பேச்சு பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. மேலும் அவரது பேச்சைக் கேட்ட சிலர், ஜாகுவார் தங்கம் மேடையில் அதை பேசி இருக்க வேண்டியதில்லை என்று கூறி வருகிறார்கள். இரவுப் பறவை படத்தை இயக்குநர் வேதாஜி பாண்டியன் எழுதி இயக்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications











