முதல் 20 நிமிடத்தை மிஸ் பண்ணிடாதீங்க.. memes கிரியேட்டர்ஸ்களே வேண்டாம்.. வீர தீர சூரன் இயக்குநர்!
சென்னை: சித்தா படத்தை தொடர்ந்து அருண்குமார் இயக்கியுள்ள வீர தீர சூரன் 2 திரைப்படம் வரும் 27ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.இவ்விழாவில் பேசிய இயக்குநர் அருண்குமார் சீயான் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் என அனைவரும் என் மேல உள்ள பாசத்தில் அதிகமா பேசிட்டாங்க என கூறியது சிரிப்பலையை ஏற்படுத்தியது. அதேநேரத்தில் ரசிகர்களுக்கும் அவர் வேண்டுகோள் வைத்திருக்கிறார். ஆனால், அதை ரசிகர்கள் பாலோ செய்வார்களா என்பது படத்தின் ரிசல்டை பொறுத்துதான் இருக்கிறது.
இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில், விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடிப்பில், ஜி.வி. பிரகாஷ் இசையில் உருவாகியிருக்கும் வீர தீர சூரன் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு கிராமத்திற்குள் ஹாலிவுட் படத்தை பார்ப்பது போன்ற பிரம்மிப்பை படத்தின் டிரெய்லர் காட்டுகிறது. தூள், சாமி படத்தில் பார்த்த விக்ரமை இப்படத்தில் காணலாம் என சமீபத்தில் அளித்த பேட்டியில் விக்ரம் தெரிவித்திருந்தார்.

ரசிகர்களுக்கான படம்: எப்போதும் முதல் பாகம் வந்த பிறகே இரண்டாம் பாகம் எடுக்கப்படும். ஆனால், இயக்குநர் அருண்குமார் எடுத்திருக்கும் முயற்சியை பாராட்டியே ஆக வேண்டும். அவர் வீர தீர சூரன் 2ஆம் பாகத்தை படமாக எடுத்து வெளியிட்டு அதன் பிறகு முதல் பாகத்தை எடுக்க இருக்கிறார். ரத்தம், துப்பாக்கி, குண்டு என ரசிகர்களை மிரட்ட இருக்கிறது வீர தீர சூரன் 2. நடிப்புத் திறமையை தாண்டி இப்படம் ரசிகர்களுக்கான படமாக இருக்கும் என இயக்குநர் அருண்குமாரும் விக்ரமும் தெரிவித்திருந்தனர். இப்படம் எடுக்க முடிவான போதே மனதில் தீர்மானமாக இருந்தது கண்டிப்பா ரசிகர்கள் இப்படத்தை ரசித்து பார்க்கும் படி இருக்க வேண்டும் என முடிவெடுத்துவிட்டதாக தெரிவித்தனர்.

பாசத்தை கொட்டிட்டாங்க: நேற்று நடந்த இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் அருண்குமார் சித்தா படத்திற்கு எனக்கு பிடித்த டீமாக வீர தீர சூரன் 2 இருந்தது. அதனால் தான் இப்படத்தை நான் நினைத்தது போல் எடுக்க முடிந்தது. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தீயாக வேலை செய்து கொடுத்துள்ளார். அவர் கொடுத்ததை அப்படியே படத்தில் வைத்தோம். அவருக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் அருண் தெரிவித்தார். பின்னர் பேசிய அவர், விக்ரம் சார், சுராஜ் சார், எஸ்.ஜே.சூர்யா எல்லோரும் என் மேல உள்ள பாசத்தில் கொஞ்சம் அதிகம் கொட்டிட்டாங்க. தயவு செய்து என்னை மீம்ஸ் போட்டு கலாய்க்க வேண்டாம் என அன்பு வேண்டுகோள் வைத்தார் அருண்குமார். அவர் பேசியதை கேட்டு விக்ரம் விழுந்து விழுந்து சிரித்தார்.

20 நிமிடம் முக்கியம் மக்களே: விக்ரம் ரசிகர்கள் வீர தீர சூரன் 2 படத்தை திரையரங்கில் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர். கண்டிப்பா படம் உங்களுக்கு பிடித்த படமாக இருக்கும் என நம்புகிறேன். சின்ன வேண்டுகோள் தான் படத்தின் முதல் 20 நிமிடங்களை மிஸ் பண்ணாதீங்க என இயக்குநர் அருண்குமார் தெரிவித்துள்ளார். ஒரே இரவில் நடக்கும் கதை என்பதால் சுவாரஸ்யம் குறையாமல் விறுவிறுப்பாக இருக்கும் என்ற ஆவலும் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











