ஏகப்பட்ட வாய்ப்பு வருதாமே.. சொந்த ஊர் திரும்பிய பிரபல ஹீரோயின்.. சினிமாவில் மீண்டும் நடிக்க முடிவு!
ஐதராபாத்: திருமணத்துக்குப் பிறகு வெளிநாட்டில் இருந்த பிரபலம் மீண்டும் நடிப்பதற்காக சொந்த ஊர் திரும்பியுள்ளார்
பிரபல தெலுங்கு நடிகை ஸ்வாதி ரெட்டி. சுப்ரமணியபுரம் படம் மூலம் தமிழில், அறிமுகமானார்.
தெலுங்கில் 'கலர்ஸ்' என்ற டிவி நிகழ்ச்சியை நடத்தி வந்த இவர், பின்னர் நடிகையானார்.

நல்ல அடையாளம்
தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்த அவருக்கு சுப்ரமணியபுரம் நல்ல அடையாளத்தை கொடுத்தது. இந்தப் படத்தில் இடம்பெற்ற கண்களிரண்டால் பாடல், அவரை கிராமங்களுக்கும் கொண்டு சென்றது. இதில், சசிகுமார், ஜெய், சமுத்திரக்கனி, கஞ்சா கருப்பு உட்பட பலர் நடித்திருந்தனர்.

மலையாள படம்
இதையடுத்து சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடித்த போராளி படத்தில் நடித்தார். பிறகு இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி, யட்சன், யாக்கை உட்பட சில படங்களில் நடித்தார். தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்து வந்தார்.

திருச்சூர் பூரம்
இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த விமானியான, விகாஸ் என்பவருக்கும், ஸ்வாதிக்கும் காதல் ஏற்பட்டது. பின்னர் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். இவர்கள் திருமணம் 2018 ஆம் ஆண்டு நடந்தது. திருமணத்துக்குப் பிறகு கணவருடன் இந்தோனேஷியா சென்ற ஸ்வாதி, அதற்குப் பிறகு திருச்சூர் பூரம் என்ற ஒரே ஒரு மலையாளப் படத்தில் நடித்தார்.

திடீரென நீக்கம்
தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் தனது கணவருடன் இருக்கும் போட்டோக்களை அடிக்கடி பதிவிட்டு வருவார் ஸ்வாதி. இந்நிலையில் திடீரென, அவரது சமூக வலைத்தள பக்கங்களில் இருந்து தனது கணவருடன் இருக்கும் போட்டோக்களை நீக்கியதாக பரபரப்பு எழுந்தது. இதனால் இருவருக்குள்ளும் பிரச்னை என்றும் கூறப்பட்டது.

அதிக வாய்ப்புகள்
பின்னர் அதை மறுத்திருந்தார் ஸ்வாதி. இந்நிலையில் இந்தோனேஷியாவில் இருந்து ஐதராபாத் திரும்பியுள்ள அவர், சினிமாவில் மீண்டும் நடிக்க முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதிக வாய்ப்புகள் வருவதாகவும் விரைவில், வெப் சீரிஸ் ஒன்றில் அவர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











