நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்க கூடாது , பாலாவின் பட்டறையை
Recommended Video
சென்னை : இரட்டை சுழி என்ற படத்தை இயக்கியவர் எழுத்தாளர் தாமிரா , பல விதமான கருத்துக்களை சமூக ஊடகங்களில் பதிவு செய்வதிலும் தவறியது இல்லை . பல புத்தகங்கள் வாசிப்பவர் , வாசிப்பை அதிகம் நேசிப்பவர் . பல சினிமா இயக்குனர்களுடன் நட்பு பாராட்டுவதில் மிகவும் பெயர் போனவர் . சமீபத்தில் இவர் முகநூலில் ஒரு கருத்தை பதிவு செய்தார். அது ஆதித்யா வர்மா படத்தின் இன்றைய வெற்றியையும் அது கடந்து வந்த பாதையையும் பற்றியது .
ஆதித்திய வர்மா திரைப்படத்தில் துருவ் விக்ரம் நன்றாக நடித்திருக்கிறார்.அவருக்கு இது முதல் படம் போல இல்லை.. சியான் விக்ரமின் மகன் என்பதை நிரூபித்து விட்டார்.. தமிழ் திரைக்கு ஒரு நல்ல நாயகன் கிடைத்துவிட்டார்.. இது தான் ஆதித்ய வர்மா திரைப்படத்திற்கு விமர்சனம் எழுதிய எல்லோரது கருத்தும் என்று தாமிரா முன் வைக்கிறார் . அது மட்டும் அல்லாமல் அவர் சொன்னது என்னவென்றால்

வெகு சிலர் - துருவ்வை பார்த்து - ஆம் இது இவருக்கு இரண்டாவது படம் தானே ! என கிண்டலாக, குறிப்பிட்டுச் சொல்லி இருந்தார்கள்.. துருவ் நன்றாக நடித்திருக்கிறார் என்கிற பாராட்டிற்குப் பின்னால் ஒரு பேருண்மையும் பெரும் வலியும் புதைந்து கிடப்பதாகத்தான் நான் உணர்கிறேன்..

அது குறித்து யாரும் பேசவில்லை என்கிற ஆதங்கமே இந்த பதிவின் காரணி...ஒரு நடிகனாக "என் காதல் கண்மணி" திரைப்படத்தில் அறிமுகமாகி....
இயக்குநர் ஸ்ரீதரால் "தந்து விட்டேன் என்னை" திரைப்படத்தில் காதல் நாயகனாக அறியப்பட்ட விக்ரம் பத்தாண்டுகள் போராட்டத்திற்கு பிறகு.. சேதுவில் தான் அடையாளம் பெற்றார். சேது ஒரு நல்ல திரைப்படம் என்பதைத் தாண்டி இயக்குநர் பாலாவின் திரைப்படத்தில் நடிப்பவர்கள் நடிப்பில் ஒரு தனி முத்திரை பதிப்பார்கள் என்று பாலாவின் அடுத்தடுத்த படங்கள் நிரூபித்தன.

சேதுவில் எப்படி ஒரு நல்ல நடிகராக அடையாளப் படுத்தப்பட்டு ஒரு முன்னணி நடிகராக விக்ரம் மாறினாரோ ..
அது போல நந்தாவில் சூர்யாவின் நடிப்பு குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இருந்தது.
நந்தா கதாபாத்திரத்தின் உடல் மொழியிலிருந்து சூர்யா விடுபடவே ஐந்து படங்களானது...
அதன் பின் வந்த பிதாமகனில் விக்ரமிற்கு நடிப்பிற்காக தேசிய விருது கிடைத்தது...
நான் கடவுள் திரைப்படத்தில் ஒரு நல்ல நடிகனாக உருவானார் ஆர்யா...
அவன் இவனில் விசாலின் நடிப்பு குறிப்பிட்டு சொல்லப்பட்டது.
அதர்வா,ஜி.வி பிரகாஷ் என நடிக்கும் நடிகர்கள் எல்லோரையும் நடிப்பின் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்ல தவறியதில்லை...!
இயக்குநர் பாலாவின் படங்கள்.

படம் வெற்றியோ தோல்வியோ...தேர்ந்த நடிகர்களை உருவாக்கும் பயிற்சிப் பட்டறையாகவே இயக்குநர் பாலாவின் எல்லா படைப்புகளும் இருந்திருக்கின்றன..!! விக்ரம் துவங்கி ஜீவி பிரகாஷ் வரைக்கும் அனைத்து நடிகர்களுக்கும் இது பொருந்தும்..இன்று துருவ் நல்ல நடிகராக உருவாகி இருப்பதற்கு அவர் பாலாவின் பயிற்சிப்பட்டறையில் தயாரானதும் ஒரு காரணமாக இருக்கலாம்..

துருவின் வெற்றிக்குப் பின்னால் கண்ணுக்குத் தெரியாமல் இயக்குநர். பாலாவின் உழைப்பு இருக்கும் என்றே நான் நம்புகிறேன்...! என்றேனும் ஒரு நாள்
ஒரு நேர்காணலில்.. துருவ் இந்த உண்மையை தன்னியல்பாக சொல்வாரென்றே நான் எதிர்பார்க்கிறேன் என தன் கருத்துக்களை எழுத்தாளர் தாமிரா பதிவு உள்ளார் .


Click it and Unblock the Notifications











