சினிமாத் தொழிலை ஆட்டிப்படைக்கும் அநியாய வட்டி! பறிபோகும் உயிர்கள்!
சினிமாத் தொழிலை ஆட்டிப்படைக்கும் அநியாய வட்டியால் பறிபோகும் உயிர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சென்னை: சினிமாத் தொழிலை ஆட்டிப்படைக்கும் அநியாய வட்டியால் பறிபோகும் உயிர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை இப்போதே தடுக்காவிட்டால் தமிழ்சினிமாவை இழுத்துமூட வேண்டியது தான் என்கின்றனர் திரைத்துறையினர்.
அவசரத்துக்கு கைமாற்றாக வாங்கும் பணத்தால் ஏற்படும் மரண நெருக்கடி கடைசியில் உயிரையே பறிப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை பொதுமக்களின் உயிரை மட்டுமே குடித்து வந்த கந்துவட்டி கும்பல் தற்போது சினிமாக்காரர்களின் உயிரையும் குடிக்க தொடங்கியுள்ளது.
சசிகுமாரின் மைத்துனரும், இணை தயாரிப்பாளருமான அசோக்குமாரின் தற்கொலை ஒட்டு மொத்த திரைத்துறையினரையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் கொடுத்த கடன் தொல்லையால் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் அன்புச்செழியன்.

தயாரிப்பாளர் ஜிவி தற்கொலை
கந்து வட்டி கொடுமையால் சினிமாத்துறையை சேர்ந்த ஒருவர் உயிரிழப்பது என்பது இது முதல்முறையல்ல. கடந்த 2003ஆம் ஆண்டு மே மாதம் தயாரிப்பாளர் ஜிவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மனைவியை சிறைபிடிப்பு
தளபதி, நாயகள், மவுனராகம் உள்ளிட்ட வெற்றிப்படங்களை கொடுத்த தயாரிப்பாளர் ஜிவி இதே அன்புச்செழியனிடம் தான் கடன் பெற்றிருந்தார். நாணயமாக வட்டியை கட்டி வந்த நிலையில் திடீரென ஒருநாள் கொடைக்கானல் சென்றிருந்த தனது மனைவியை சிறைபிடித்தது அன்புச்செழியனின் கும்பல்.

எந்த நடவடிக்கையும் இல்லை
இதனால் அதிர்ச்சியடைந்த ஜிவி மறுநாளே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் திரைத்துறையே அதிர்ச்சியடைந்தது. ஆனால் அன்புச்செழியன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கேட்டவுடன் கிடைப்பதால்..
திரைத்துறையினரும் அன்புச்செழியனை ஒதுக்கவில்லை. எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும் கேட்ட சில மணி நேரத்திலேயே கிடைப்பதால் அன்புச்செழியனின் உதவி சினிமாத்துறையினருக்கு தேவைப்பட்டு வருகிறது.

காஜா மைதீன் தற்கொலை முயற்சி
கடந்த 2005ஆம் ஆண்டு 40 தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற தயாரிப்பாளர் காஜா மைதீன் தனது நிலைக்கு பைனான்சியர் சுபாஷ் நிஹர் தான் காரணம் எனக் கூறியிருந்தார். தான் வாங்கிய ரூ. 20 லட்சம் கடனுக்காக தனது வீட்டை ஏமாற்றி தனது மனைவி பெயரில் நஹர் எழுதிக்கொண்டார் என அவர் குற்றம்சாட்டினார்.

போத்ரா மீது சதீஷ்குமார் புகார்
அண்மையில் சினிமா பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா மீது, ஜேஎஸ்கே பிலிம்ஸ் நிறுவன உரிமையாளரும் தயாரிப்பாளருமான சதீஷ்குமார் கந்துவட்டி புகார் கொடுத்தார். வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்த போதும் போத்ரா மற்றும் அவரது மகன்கள் பணம் கேட்டு மிரட்டுவதாக புகார் அளித்தார்.

அன்புச்செழியனால் மீண்டும்..
இந்நிலையில் சசிகுமாரின் மைத்துனர் மற்றும் இணை தயாரிப்பாளரான அசோக்குமார் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் கொடுத்த கடன் தொல்லையால் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுவரை பொதுமக்களின் உயிரை மட்டுமே பறித்து வந்த கந்துவட்டி கொடுமை தற்போது சினிமாத்துறையினரின் உயிரையும் பறிக்க தொடங்கியுள்ளது. இதனை இப்போதே தடுக்காவிட்டால் தமிழ்சினிமாவை இழுத்துமூட வேண்டியது தான் என்கின்றனர் திரைத்துறையினர்.


Click it and Unblock the Notifications











