அந்த சவக்குழிக்குள் மண் விழுவதற்குள் அத்தனை அபாய குழிகளையும் மூடிவிடு! - வைரமுத்து இரங்கல்
Recommended Video
சென்னை: ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து மரணமடைந்த சிறுவன் சுஜித்தின் உடல் அழுகிய நிலையில் மூன்று நாட்களுக்கு போராடி மீட்கப்பட்டது. இந்த சோக நிகழ்வுக்காக திரையுலகத்தினர் அனைவரும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். கவிஞர் வைரமுத்து சுஜித்திற்காக ஒரு கண்ணீர் கவிதையை எழுதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஒரு ஆழ்துளை கிணற்றுக்குள் சுஜித் என்ற 2 வயது சிறுவன் தவறி விழுந்து 3 நாட்களாக தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு படையினர், பொது மக்கள் என பலரும் இரவு பகலாக கடுமையாக போராடிய பிறகும் சுஜித்தை உயிரோடு மீட்க முடியாமல் போனது. இது உலகத்தையே உலுக்கியிருக்கும் ஒரு சம்பவம்.

சுஜித் என்ற இந்த இளம் பிஞ்சு குழந்தை நல்ல படியாக போர் வெல் குழியில் இருந்து மீட்கப்படவேண்டுமே என்று இந்த உலகத்தில் இருக்கும் அனைவரின் வேண்டுதலாய் இருந்தது.
அவனின் மரணம் நம் அனைவரது மனதையும் கலங்க செய்துள்ளது. அந்த மீட்பு பணி கடினமானதாக இருப்பினும், அவர்களின் முயற்சியால் ஒரு அற்புதம் நிகழாதா, அந்த குழந்தை மீட்கப்படாத என்று நாம் அனைவரும் ஆவலோடு கலங்கிய கனத்த இதயத்தோடு காத்துக்கொண்டிருதோம். ஆனால் நம் நம்பிக்கை பொய்த்து போனது.
அவனது உடல் அழுகிய நிலையில் எடுக்கப்பட்டது நம் அனைவரையும் குலுக்கி விட்டது. இது போன்ற மற்றுமொரு நிகழ்வு இனி இந்த உலகில் யாருக்கும் நிகழவே கூடாது. சுஜித்தின் இழப்பே கடைசியாய் இருக்கட்டும்.
சுஜித்திற்காக திரையுலத்தினர் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் சுஜித்திற்காக ஒரு கண்ணீர் கவிதையை எழுதியுள்ளார்.
அதோ ஒருத்தியின் கண்ணில் உலகத்தின் கண்ணீர்
வந்த மழையும் இனி எந்த மழையும் அந்த தாயின் கண்ணீர் கரையை கழுவ இயலுமா?
அடே சுஜித்... இத்தனை பேர் அழுத கண்ணீரில் - நீ மிதந்து மிதந்து மேலெழும்பி இருக்கலாம்
ஆனால் அழுத கண்ணீர் எல்லாம் உன்னை அழுக வைத்து விட்டதே !
உன்னை மீட்க கையில் கயிறு கட்டி பார்த்தோம் - ஆனால் உன் கால் விரலில் கயிறு கட்டிவிட்டதே மரணம்!
எவனவன் பின்கூட்டி பிறந்த குழந்தைக்கு முன்கூட்டியே சவக்குழி வெட்டியவன் !
உலகத்தின் நீளமான சவக்குழி இதுதானோ என்னவோ - நடக்க கூடாதது நடந்தேறிவிட்டது.
மரணத்தில் பாடம் படிப்பது மடமை சமூகம் - மரணத்திலும் கல்லாதது அடிமை சமூகம்.
மடமை சமூகமே வாழ்வின் பக்கவிளைவு மரணமெனில், மரணத்தின் பக்கவிளைவு ஞானம் தானே !
அந்த சவக்குழிக்குள் மண் விழுவதற்குள் அத்தனை அபாய குழிகளையும் மூடிவிடு!
அந்த மெழுகுவர்த்தி அனைவதற்குள் அத்தனை கண்ணீரையும் துடைத்து விடு!
ஏ வானம் பார்க்கும் தொழில்நுட்பமே சற்றே குனிந்து பாதாளம் பார்.
இந்த மரணத்தோடு முடியட்டும் பிஞ்சு சாவுகள் !
யாரும் எழுந்து கொள்ளவேண்டாம் ஜன கன மன !
கவிஞர் வைரமுத்து அவர்களின் இந்த கண்ணீர் கவிதை நமது இதயங்களை துளைக்கின்றன. இந்த கண்ணீர் கவிதை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அரசாங்கத்தை மட்டுமே குறை கூறாமல் பொதுமக்களாகிய நாமும் சிறிது கவனத்தோடும், விழிப்புணர்வோடும் செயல்படுவோமேயானால் இது போன்ற அநியாய இழப்புகளை தவிர்க்கலாம்.
சுர்ஜித்தின் குடும்பத்திற்கு ஃபிலிமிபீட் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.


Click it and Unblock the Notifications











