Suganya: திருவண்ணாமலையில் சுகன்யா.. மெய் மறந்து பாடல் பாடி வழிபாடு!
சென்னை: திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்து உள்ள ரமண மகரிஷி ஆசிரமத்தில் ஸ்ரீ ரமண மகரிஷி 75 ஆம் ஆண்டு ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகை சுகன்யா கலந்து கொண்டு, மெய் மறந்து ரமணர் பாடலை பாடினார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
90 கால கட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் தான் நடிகை சுகன்யா. பரதநாட்டிய கலைஞரான சுகன்யாவிற்கு நடிப்பை தாண்டி பரதநாட்டியத்திலும், இசையின் மீது மிகவும் அளவிற்கு அதிகமாக ஆர்வம் கொண்டவர். இவர் பாரதிராஜா இயக்கத்தில் உருவான புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். நெப்போலியன், பொன்வண்ணன் நடித்த இந்த திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து இருந்தார். இந்த படத்தில் இடம் பெற்று இருந்த அனைத்து பாடல்களும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற குறிப்பாக, கருத்த மச்சான் பாடல் இன்று வரைக்கும் அனைவரையும் ஆட்டம் போட வைக்கும் பாடலாக உள்ளது.

புது நெல்லு புது நாத்து: சுகன்யா அறிமுகமான முதல் படமே பெயர் சொல்லும் படமாக அமைந்துவிட்டதால், தொடர்ந்து அடுத்தடுத்த படத்தில் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்தார். என்னத்தான் நடிகை சுகன்யா நடிகையாக மாறினாலும், அவருக்கு சினிமாவில் நடிக்கவேண்டும் என்ற ஆசையே இல்லை. ஆனால், சுகன்யா பெற்றோர், அவர் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று விரும்பினார்கள். முதல் படமே மிகப் பெரிய அளவில் வெற்றி அடைந்ததால், ரஜினியே முத்து படத்தில், மீனா கதாபாத்திரத்தில் சுகன்யா நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறி இருக்கிறார். பட குழுவினர், சுகன்யாவின் கால்ஷீட்டுக்காக ஒரு மாத காலத்திற்கும் மேல் காத்திருந்தனர். ஆனால், அப்போதும், சுகன்யா படு பிஸியாக இருந்ததால், கால்ஷீட் கிடைக்க தாமதமாகிக் கொண்டே சென்றதால், அந்த கதாபாத்திரத்தில் மீனா நடித்ததாக தமிழா தமிழா பாண்டியன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
திறமையான நடிகை : சினிமாவில் மிகப்பெரிய ரவுண்டு வந்த நடிகை சுகன்யா, கடந்த 2002 ஆம் ஆண்டு ஸ்ரீதர் ராஜகோபால் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் குடியேறினார். ஆனால், திருமணமான ஒரே ஆண்டில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வந்து விவாகரத்து பெற்றனர். திருமணமாகி சில ஆண்டுகளிலேயே விவாகரத்து செய்யக்கூடி அளவிற்கு இருவருக்கும என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. விவகாரத்திற்கு பின் எதிலும் ஈடுபாடு இல்லாமல் இருந்த நடிகை சுகன்யா, சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்தம் சீரியலில் நடித்தார். நடிகையாக மட்டுமின்றி சில சோலோ ஆல்பங்களை சுகன்யா வெளியிட்டு இருக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் உருவான கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி உள்ள சுகன்யா, எஸ்.வி.சேகர் இயக்கிய 'கிருஷ்ண கிருஷ்ணா' படத்தில் ஒரு பாடலையும் பாடி இருக்கிறார்.
இந்த நிலையில், நடிகை சுகன்யா திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ரமண மகரிஷி ஆசிரமத்தில் ஸ்ரீ ரமண மகரிஷியின் 75 ஆம் ஆண்டு ஆராதனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ரமணர் பாடலை மனம் உருகி பாடினார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது டிரெண்டாகி உள்ளது. பின் ஆசிரமத்தில் உள்ள சிவலிங்கத்திற்கு அபிஷேகமும், தீப ஆராதனையும் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்த கொண்டு மனம் உருகி பிரார்த்தனை செய்தனர்.


Click it and Unblock the Notifications











