தனி ஆளாக களம் இறங்கும் "எதற்கும் துணிந்தவன்"... ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் செய்த சன் பிக்சர்ஸ்
சென்னை : சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் தனி ஆளாக தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதை, படத்தின் ரிலீஸ் தேதியுடன் கன்ஃபார்ம் செய்து வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.
டைரக்டர் பாண்டிராஜ் இயக்கத்தில் பசங்க 2 படத்திற்கு பிறகு சூர்யா மீண்டும் இணைந்துள்ள படம் எதற்கும் துணிந்தவன். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், வினய் ராய், சூரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ளார். எதற்கும் துணிந்தவன் படத்தில் மோஷன் போஸ்டர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு 2021 ம் ஆண்டு ஜுலை மாதம் வெளியிடப்பட்டது.

ரசிகர்களை கவர்ந்த பாடல்கள்
சமீபத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தின் வாடா தம்பி, உள்ளம் உருகுதய்யா, சும்மா சுருன்னு ஆகிய பாடல்கள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டன. இந்த பாடல்கள் அனைத்துமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. கிட்டதட்ட மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தியேட்டரில் வெளியாக போகும் படம் என்பதால் எதற்கும் துணிந்தவன் படத்தின் மீதான ஆர்வம் அதிகரித்து காணப்பட்டது.

ரிலீசுக்கு காத்திருக்கும் ரசிகர்கள்
சூர்யா இரட்டை வேடத்தில் நடித்துள்ள இந்த படம் பொள்ளாச்சி சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எதற்கும் துணிந்தவன் படம் பற்றிய பல தகவல்கள் இந்த படத்தின் மீதான ஆர்வத்தை பல மடங்கு அதிகரிக்க செய்துள்ளது. இந்த படம் எப்போது ரிலீசாகும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

தள்ளி போன ரிலீஸ்
வழக்கமாக குடும்ப, சென்டிமென்ட் படங்களையே இயக்கி வந்த டைரக்டர் பாண்டிராஜ், இதில் வித்தியாசமாக ஆக்ஷன், த்ரில்லர் கதையை இயக்கி உள்ளாார். 2021 ம் ஆண்டு கிறிஸ்துமசை முன்னிட்டே எதற்கும் துணிந்தவன் படத்தை ரிலீஸ் செய்யவே முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் அல்லு அர்ஜுனின் புஷ்பா, ஸ்பைடமேன், மார்வேல்ஸ் போன்ற படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் செய்யப்பட்டதால் படத்தின் ரிலீஸ் தள்ளி போனது. கிறிஸ்துமசிற்குள் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் முடிக்க முடியாமலும் போனது.

குழப்பத்தில் படக்குழு
ஜனவரியில் ரிலீஸ் செய்யலாமா என படக்குழு முதலில் யோசித்தது. ஆனால் விஜய்யின் பீஸ்ட், அஜித்தின் வலிமை பொங்கலுக்கு ரிலீசாகும் என கூறப்பட்டதால் எதற்கும் துணிந்தவன் படத்தின் ரிலீஸ் பிப்ரவரி 4 ம் தேதிக்கு முடிவு செய்யப்பட்டது. பிப்ரவரி 4 ம் தேதி ரிலீஸ் என்ற போஸ்டரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. ஆனால் கொரோனா பரவலால் பொங்கல் ரிலீஸ் படங்கள் அடுத்தடுத்து தள்ளி வைக்கப்பட்டதால், ட்விட்டர் பக்கத்தில் இருந்து ரிலீஸ் தேதியை அகற்றியது சன் பிக்சர்ஸ்.

ரிலீஸ் தேதி இதுதானா
தற்போது ஊரடங்கு ரத்து செய்யப்பட்டதால் பல படங்களும் ரிலீஸ் தேதியை அறிவித்து வருகின்றன. இதனால் பிப்ரவரி 11 ம் தேதி எதற்கும் துணிந்தவன் ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது ரிலீஸ் மார்ச் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மார்ச் 10 ம் தேதி எதற்கும் துணிந்தவன் படத்தை தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது சன் பிக்சர்ஸ்.


Click it and Unblock the Notifications











