Aranmanai 4 Box collection: 4 நாள் வசூலில் அடித்து ஆடிய அரண்மனை 4... வசூல் எவ்வளவு தெரியுமா?
சென்னை: சுந்தர்.சியின் அரண்மனை 4 படம் வெளியாகி திரையரங்கில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தில், சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, சிங்கம்புலி, விடிவி கணேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் நான்காம் நாள் வசூல் எவ்வளவு என்பதை இப்போது பார்க்கலாம்
கடந்த 2014 ஆம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் ஹன்சிகா, ஆன்ட்ரியா, வினய் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் அரண்மனை. இதில், ஹன்சிகாவை வில்லன் கொன்றுவிட பழிவாங்க துடிக்கும் பேயாக நடித்திருந்தார். இந்த படம் சக்கைப்போடு போட்டு வசூலை அள்ளியது. இந்த படத்தை தொடர்ந்து 2016ம் ஆண்டு அரண்மனை இரண்டாம் பாகம் வெளியானது. இதில், சித்தார்த், த்ரிஷா, கோவை சரளா, சூரி என பலர் நடித்திருந்தார்கள்.

அரண்மனை: இந்த படமும் வெற்றி பெற்றதால், 2021ஆம் ஆண்டு இப்படத்தின் மூன்றாம் பாகம் வெளியானது. அதில், ஆர்யா, ராஷிகண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால், விவேக் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். இந்த படம் சுமாராகத்தான் ஓடியது. மூன்றாம் பாகத்திலும், அதே அரண்மனை பேய், சுந்தர் சி காப்பாற்றுவது போல கதை இருந்ததால், மூன்றாம் பாகம் மக்கள் மனதில் நிற்காமல் தோல்விப்படமாக அமைந்தது.
அரண்மனை 4: அரண்மனை மூன்றாம் பாகம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத போதும், சுந்தர் சி அரண்மனை நான்காம் படத்தை இயக்கி வெளியிட்டுள்ளார். இப்படத்தில், சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, சிங்கம்புலி, விடிவி கணேஷ், டெல்லி கணேஷ், ஜே பி, விச்சு, கேஜிஎஃப் ராம், சேசு, சந்தோஷ் பிரதாப், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹிப்ஹாப் ஆதி படத்துக்கு இசையமைத்துள்ள இப்படம் 3ந் தேதி வெளியாகி சக்கைப்போடு போட்டு வருகிறது. ஹிப் ஹாப் ஆதியின் இசை படத்திற்கு கூடுதல் பலமாக இருந்தது.
கதை: குடும்பத்தை எதிர்த்து திருமணம் செய்து கொண்ட தமன்னா, தனது கணவர் மற்றும் குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இந்த நேரத்தில் கணவர் மர்மமான முறையில் இறந்துவிட, தமன்னா தற்கொலை செய்து கொள்கிறார். இந்த தகவல் தெரிந்து தங்கையின் அரண்மனைக்கு வரும் சுந்தர் சிக்கு தன் தங்கை மற்றும் அவர் கணவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகப்படுகிறார். மேலும், ஒரு தீய சக்தி தங்கையின் மகளை பழி கொடுக்க இருப்பதை தெரிந்து கொண்ட சுந்தர் சி, அந்த தீய சக்தியிடம் இருந்து குழந்தையை எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் படத்தின் கதை.
நான்காம் நாள் வசூல்: இப்படம் முதல் நாளில் நாளில் ரூ 4.65 கோடி வசூலித்தது, இரண்டாவது நாளில் ரூ 6.65 கோடி வசூலித்தது. மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை ரூ.7.85 கோடி வசூல் செய்த நிலையில், நான்காம் நாளான நேற்று ரூ 3 கோடியை வசூலித்துள்ளது. திங்கட்கிழமை வேலை நாள் என்பதால், படத்தின் வசூல் சற்று சரிந்துள்ளது. இப்படம் இந்தியாவில் ரூ.19.15 கோடியாகவும், உலகம் முழுவதும் ரூ.22 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











