Sundar C: “கமலின் அன்பே சிவம் படத்தால் ரொம்பவே நொந்து போய்விட்டேன்..” சுந்தர் சி ஓபன் டாக்!
சென்னை: தமிழில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான சுந்தர் சி தற்போது அரண்மனை 4ம் பாகம் இயக்கி வருகிறார். இவரது இயக்கத்தில் கமல் நடித்த படம் அன்பே சிவம். 2003ம் ஆண்டு வெளியான இந்தப் படம் குறித்து சினிமா விமர்சகர்கள் இப்போதும் அதிகம் விவாதித்து வருகின்றனர். இந்நிலையில், அன்பே சிவம் படத்தால் ரொம்பவே நொந்து போய்விட்டேன் என சுந்தர் சி ஓபனாக பேசியுள்ளார்.
அன்பே சிவம் படத்தால் இழந்தது அதிகம்: 1995ம் ஆண்டு வெளியான முறை மாமன் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமனவர் சுந்தர் சி. ஜெயராம், கவுண்டமணி, குஷ்பூ நடித்திருந்த இந்தப் படம் சூப்பர் ஹிட் ஆனது. அதன் பின்னரும் தொடர்ந்து காமெடி ஜானரில் படங்களை இயக்கி வருகிறார் சுந்தர் சி. முறை மாப்பிள்ளை, உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, அருணாச்சலம், உன்னை தேடி, அன்பே சிவம், வின்னர், தலைநகரம், அரண்மனை என பல படங்களை இயக்கியுள்ளார்.

இதில் சுந்தர் சி இயக்கிய அன்பே சிவம் திரைப்படம் 2003ம் ஆண்டு வெளியானது. கமல்ஹாசனுடன் மாதவன், கிரண், உமா ரியாஸ், சந்தான பாரதி, நாசர், யூகி சேது என பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். கமல்ஹாசன் கதை, திரைக்கதை எழுத வித்யாசாகர் இசையமைத்திருந்தார். கமல் கேரியரில் இன்னொரு கல்ட் கிளாஸிக் சினிமாவாக அன்பே சிவம் கொண்டாடப்படுகிறது. இந்தப் படம் குறித்து இப்போதும் சினிமா ரசிகர்கள் விவாதம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், அன்பே சிவம் படத்தால் நான் ரொம்பவே நொந்துவிட்டேன் என இயக்குநர் சுந்தர் சி கூறியுள்ளார். எப்போதும் காமெடி ஜானர் படங்கள் மட்டுமே இயக்குவது ஏன். அன்பே சிவம் மாதிரியான படங்களை இயக்கலாமே என சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சுந்தர் சி, அன்பே சிவம் வெளியான போது நீங்கள் எல்லாம் எங்கே போயிருந்தீங்க. படம் வெளியான போது ரசிகர்களிடம் சுத்தமாக வரவேற்பே பெறவில்லை.
ஆனால், பல ஆண்டுகளுக்குப் பின்னர் தான் அன்பே சிவம் நல்ல படம் என ரசிகர்கள் அங்கீகாரம் கொடுத்துள்ளனர். இப்படியெல்லாம் இருந்தால் அன்பே சிவாம் மாதிரியான படங்கள் இயக்க ஆசை வராது. அன்பே சிவம் ரிலீஸான நேரத்தில் ஒரு வருடமாக படம் இயக்க வாய்ப்பு கிடைக்காமல் வீட்டிலேயே இருந்தேன். அப்போதே இனி அன்பே சிவம் மாதிரியான படங்களை இயக்கக் கூடாது என முடிவு செய்துவிட்டதாக ஆதங்கப்பட்டுள்ளார்.
சுந்தர் சி-யின் இந்த பேச்சு ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், அன்பே சிவம் மட்டும் கிடையாது, இதுபோன்ற மேலும் பல படங்களுக்கும் இதே நிலை தான் இருந்துள்ளது எனவும் கருத்து தெரிவித்துள்ளனர். அன்பே சிவம் படத்தில் இடம்பெற்ற வசனங்கள் இப்போதும் மீம்ஸ் டெம்ளேட்டாகவும் இன்ஸ்டா ரீல்ஸ்களிலும் அடிக்கடி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











