மதகஜராஜா ரிலீஸ்.. இரண்டு நாட்கள் முழுக்க கண்ணீர்தான்.. எமோஷனலான சுந்தர்.சி
சென்னை: மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக இருந்தவர் சுந்தர்.சி. பிறகு முறைமாமன் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமான அவர் ஏராளமான ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். காமெடி ஜானரில் படம் இயக்கி தனக்கென தனி அடையாளத்தை பெற்ற அவர் 12 வருடங்களுக்கு முன்பு மதகஜராஜா படத்தை இயக்கியிருந்தார். விஷால், அஞ்சலி, வரலட்சுமி, சந்தானம் உள்ளிட்டோர் நடித்திருக்கும் அப்படமானது சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ஹிட்டடித்திருக்கிறது.
சுந்தர்.சி தமிழ் சினிமாவின் சீனியர் இயக்குநர்களில் ஒருவர். அவர் முதலில் இயக்கிய படம் முறைமாமன். ஜெயராம், கவுண்டமணி, குஷ்பூ உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதிலும் அப்படத்தில் இடம்பெற்ற காமெடி காட்சிகள் அனைத்துமே இன்றுவரை ரசிக்கக்கூடியவை. அடுத்ததாக அவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா, உனக்காக எல்லாம் உனக்காக, மேட்டுக்குடி உள்ளிட்ட படங்கள் எல்லாம் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட்டாக திகழ்ந்துகொண்டிருப்பவை.

காமெடி ஜானரில் கிங்: சுந்தர்.சி படம் என்றாலே அதில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது. அப்படி அவர் இயக்கிய வின்னர் படம் எல்லாம் காலத்துக்கும் தனித்து நிற்பவை. இடையில் சில காலம் இயக்கத்தை நிறுத்தி நடிப்பதில் ஆர்வம் காட்டிய அவர் மீண்டும் இயக்கம் பக்கம் திரும்பினார். அப்படி அவர் இயக்கிய கலகலப்பு, அரண்மனை சீரிஸ் படங்கள் எல்லாம் மெகா ஹிட்டாகின. சூழல் இப்படி இருக்க 12 வருடங்களுக்கு முன்பு அவர் இயக்கிய மதகஜராஜா திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சக்கைப்போடு போட்டுவருகிறது.
சுந்தர்.சி பேட்டி: படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் இந்தப் படம் குறித்து பேசிய அவர், "மதகஜராஜா திரைப்படம் 12 வருடங்களுக்கு முன்பு எடுத்தேன். கடந்த கும்பமேளாவுக்கு வந்திருக்க வேண்டிய படம் இந்த ஆண்டு கும்பமேளாவுக்கு வந்திருக்கிறது. படத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை பார்த்து கடந்த இரண்டு நாட்களாக முழுக்க முழுக்க கண்களில் கண்ணீருடன் இருந்தேன்.
பாசிட்டிவ் விமர்சனம்: கிட்டத்தட்ட படத்துக்கு 100க்கு 100 சதவீதம் பாசிட்டிவ் விமர்சனம் வந்திருக்கிறது. அப்படி ஒரு படத்துக்கு வந்தது என்றால் இந்தப் படத்துக்குத்தான். இந்தப் படம் மட்டுமின்றி பொங்கலுக்கு வெளியான எல்லா படங்களும் பெரிய வெற்றி பெற வேண்டும் என்று ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்.மூன்று மாதங்களுக்கு முன்பே இந்தப் படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தோம். ஆனால் பல வருடங்களுக்கு பிறகு கிட்டத்தட்ட பத்து நாட்கள் இந்தப் பொங்கலுக்கு விடுமுறை வந்தது. எனவே அதற்கேற்றபடி ரிலீஸை திட்டமிட்டோம்" என்றார்.
படக்குழு மகிழ்ச்சி: முன்னதாக இந்தப் படத்துக்கு கிடைத்த ரெஸ்பான்ஸை சுந்தர்.சி மட்டுமின்றி ஒட்டுமொத்த படக்குழுவுமே உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறது. 12 வருடங்கள் கழித்து மதகஜராஜா வெளியிட்டாலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது படக்குழுவை மட்டுமின்றி ஒட்டுமொத்த கோடம்பாக்கத்தையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications