விஷால் என் தம்பி.. அவரை பார்க்கவே கூடாது என்று நினைத்தேன்.. சுந்தர்.சி ஓபன் டாக்
சென்னை: விஷால் - சுந்தர்.சி கூட்டணியில் மதகஜராஜா திரைப்படம் உருவாகியிருக்கிறது. 13 வருடங்களுக்கு முன்பு உருவான அந்தத் திரைப்படம் பல சிக்கல்களை தாண்டி இந்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸாகவிருக்கிறது. அதனையொட்டி படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடிக்க தொடங்கியிருக்கின்றன. அந்தவகையில் மதகஜராஜா ப்ரோமோஷனில் பேசிய சுந்தர்.சி நடிகர் விஷால் குறித்து நெகிழ்ச்சியோடு பேசியிருக்கிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான சுந்தர்.சி ஏராளமான ஹிட் படங்களை இயக்கியிருக்கிறார். அவரது படங்கள் என்றாலே சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது என்பதுதான் உண்மை. அந்தவகையில் அவரது இயக்கத்தில் கடைசியாக அரண்மனை 4 திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்டது அந்தப் படம். அடுத்ததாக கேங்கர்ஸ் என்ற படத்தை இயக்கவிருக்கிறார் அவர்.

மதகஜராஜா: இதற்கிடையே விஷால், வரலட்சுமி, அஞ்சலி, சந்தானம் உள்ளிட்டோரை வைத்து மதகஜராஜா என்ற படத்தை கடந்த 2012ஆம் ஆண்டு இயக்கினார் சுந்தர். ஆனால் அந்தப் படம் சில காரணங்களால் ரிலீஸாகாமலேயே இருந்தது. ஒருகட்டத்தில் அந்தப் படம் ரிலீஸே ஆகாது என்றுதான் சுந்தர்.சி உள்ளிட்டோரும் நினைக்க தொடங்கினார்கள். சூழல் இப்படி இருக்க ஸ்வீட் சர்ப்ரைஸாக இந்த வருட பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14ஆம் தேதி படம் ரிலீஸாகவிருக்கிறது.
சுந்தர்.சி பேச்சு: இதனையடுத்து படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடிக்க தொடங்கியிருக்கின்றன. அந்தவகையில் சென்னையில் சமீபத்தில் நடந்த ப்ரோமோஷனில் பேசிய சுந்தர்.சி, "நானும் விஷாலும் அவ்வளவாக பழகிக்கொண்டது இல்லை. குஷ்பூவும் அவரும்தான் நெருங்கிய பழக்கம். முன்னர் பின்னர் அவரும் நானும் நேரில்கூட சந்தித்துக்கொண்டது இல்லை என்பதுதான் உண்மை. குஷ்பூவின் மூலம்தான் விஷாலுக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதனையடுத்து என்னிடம் கதை இருக்கிறதா என்று குஷ்பூவின் மூலம் கேட்டார்.
முதல் அனுபவம்: குஷ்பூவும் விஷாலுக்கு கதை இருந்தால் சொல்லும்படி கூறினார். அதனையடுத்து அவருக்கு கதை சொல்வதற்காக அவரது அலுவலகத்துக்கு சென்றேன். அப்போது விஷால் அங்கு இல்லை. இதனால் ரொம்பவே டென்ஷனாகி வீட்டுக்கு வந்துவிட்டேன். பிறகு குஷ்பூவிடம் இனி விஷாலை நான் பார்க்கவே மாட்டேன் என்று கூறி நடந்ததை சொன்னேன். உடனே குஷ்பூ அப்பவும் விஷாலுக்குத்தான் சப்போர்ட் செய்தார். தொடர்ந்து அவருக்கு ஃபோன் செய்ய முயற்சி செய்தார். நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.
விஷால் என் தம்பி: சில நாட்கள் கழித்து நானும் விஷாலும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டோம். அப்போது நான் விஷாலை பார்க்காமல் முகத்தை திருப்பிக்கொண்டேன். அதனை கவனித்துவிட்ட விஷால் நேராக என்னிடம் வந்து கையை பிடித்து; அன்றைய தினம் வீட்டில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதித்திருந்தோம். அதனால்தான் அவசர அவசரமாக கிளம்ப வேண்டிய சூழல் வந்துவிட்டது என கூறினார். பிறகு நான் சமாதானம் ஆனதையடுத்து கதை சொன்னேன். எனது திரையுலக பயணத்தில் நடிகர் கார்த்திக்கை அண்ணனாக ஏற்றுக்கொண்டேன். விஷாலை தம்பியாக ஏற்றுக்கொண்டேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











