ரஜினியின் தலைவர் 173.. படத்திலிருந்து விலக அதுதான் காரணமா?.. மௌனம் கலைத்த சுந்தர்.சி
சென்னை: ரஜினிகாந்த்தை வைத்து கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தை சுந்தர்.சிதான் முதலில் இயக்குவதாக இருந்தார். ஆனால் சில காரணங்களால் அவர் வெளியேறினார். அதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டன. ஆனால் சம்பந்தப்பட்ட சுந்தர் ஒரு அறிக்கையை வெளியிட்டுவிட்டு அமைதியாகிக்கொண்டார். அவருக்கு பதில் சிபி சக்கரவர்த்தி இயக்குநராக கமிட்டாகியிருக்கிறார். இந்நிலையில் தலைவர் 173 படத்திலிருந்து விலகியதற்கான காரணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.
ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக முதலில் தகவல்கள் பரவின. ஆனால் அந்தப் படம் லேட்டாக ஆரம்பிக்கப்படும் என்றும் முதலில் ரஜினியை வைத்து கமல் ஒரு படத்தை தயாரிப்பார் என்று சொல்லியும் சுந்தர்.சியை இயக்குநராக கமிட் செய்தார்கள். இளம் இயக்குநர்கள் வரிசையாக ரஜினிக்கு சொதப்பலான படங்களை கொடுப்பதால் சீனியர் இயக்குநருடன் இணைந்தார் சூப்பர் ஸ்டார். ஏற்கனவே ரஜினியை வைத்து அருணாச்சலம் படத்தை ஹிட் கொடுத்திருக்கிறார் என்பது நினைவுகூரத்தக்கது.

நம்பிக்கை கொண்டிருந்த ரசிகர்கள்: அதுமட்டுமின்றி அவரது இயக்கத்தில் உருவான மதகஜராஜா படம் கால தாமதமாக ரிலீஸானாலும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இதன் காரணமாகவும் ரஜினியை வைத்து கண்டிப்பாக தரமான ஹிட்டை கொடுப்பார் என்றுதான் ரசிகர்கள் அனைவருமே நம்பிக்கொண்டிருந்தார்கள். நிலைமை இப்படி இருக்க; இந்தப் படத்திலிருந்து தான் விலகுவதாக அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார். ரஜினியை இயக்குவதற்கு பலரும் ஏங்கும் நிலையில் இவர் விலகியது பெரும் ஆச்சரியத்தையும் கொடுத்தது.
என்ன காரணம்?: அவரது இந்த விலகலுக்கு பலரும் பலவித காரணங்களை சொல்கிறார்கள். முதலில் இப்படத்தை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் உருவாக்க சுந்தர் விரும்பியதாகவும்; அதற்கு கமல் ஒத்துவராததால் இந்த வெளியேற்றம் நடந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் அதெல்லாம் உண்மையான காரணம் இல்லை. சுந்தர்.சி சொன்ன கதை பிடிக்காததால்தான் அவருக்கு பதிலாக வேறு இயக்குநரை ஃபிக்ஸ் செய்யும் சூழல் உருவானதாகவும் பேச்சுக்கள் ஓடின. அதேபோல் சங்கமித்ரா படத்தை சுந்தர்.சி ஆரம்பிப்பதால்தான் இதிலிருந்து விலகிவிட்டார் என்றும் கூறினார்கள் சிலர். அவர் விலகியதை அடுத்து சிபி சக்கரவர்த்தி இயக்குநராக உள்ளே வந்திருக்கிறார்.
சுந்தரின் விளக்கம்: இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'சங்கமித்ரா படத்தை ஆரம்பிக்கப்போவதாகவும் அதற்காக தலைவர் 173 படத்திலிருந்து விலகிவிட்டதாக சொல்கிறார்கள். ஆனால் அதில் உண்மையில்லை. இரண்டு வருடங்களுக்கு எனக்கு கமிட்மென்ட் சரியாக இருக்கிறது. சங்கமித்ரா படத்தை இப்போதைக்கு ஆரம்பிப்பதாக இல்லை. எனவே அதற்கும் தலைவர் 173க்கும் கனெக்ஷன் இல்லை. மூக்குத்தி அம்மன் 2 படத்தின் ஷூட்டிங் முடிந்து நான்கு மாதங்கள் ஆகிவிட்டன. இப்போது சிஜி பணிகள் போய்க்கொண்டிருக்கின்றன' என்றார்.
சங்கமித்ரா படம்: முன்னதாக, கடந்த 2018ஆம் ஆண்டு சங்கமித்ரா படம் பற்றிய அறிவிப்பு வெளியானது. ஆர்யா, ரவி மோகன் உள்ளிட்டோரை வைத்து அப்படத்தை அவர் இயக்குவதாக இருந்தார். பிரமாண்ட பட்ஜெட்டில் பாகுபலி ஸ்டைலில் உருவாவதாக கூறப்பட்டது. ஆனால் பட்ஜெட் கூடி வராததன் காரணமாக அப்படத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார் சுந்தர்.


Click it and Unblock the Notifications















