Sundar C: “ஒண்ணுமே இல்லாத நடிகர்களை தூக்கி விடுறதே ரசிகர்கள் தான்”: உண்மையை போட்டுடைத்த சுந்தர் சி!
சென்னை: முறை மாமன் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுந்தர் சி.
உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ள அவர், தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
2006ம் ஆண்டு வெளியான தலைநகரம் படத்தில் ஹீரோவாக அறிமுகமான அவர், அதில் நடித்த அனுபவம் குறித்து தற்போது பேசியுள்ளார்.
அப்போது ஒண்ணுமே இல்லாத நடிகர்களை தூக்கி விடுறதே ரசிகர்கள் தான் என அவர் கூறியது வைரலாகி வருகிறது.

நடிகர்களை தூக்கி விடுவதே ரசிகர்கள் தான்:1995ம் ஆண்டு வெளியான முறை மாமன் திரைப்படம் மூலம் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்தார் சுந்தர் சி. உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, அருணாச்சலம், ஜானகி ராமன், உன்னைதேடி, கண்ணன் வருவான் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். தயாரிப்பாளர்களின் இயக்குநர் என்ற பெருமைக்குரிய சுந்தர் சி, தற்போது நடிகராகவும் மாஸ் காட்டி வருகிறார்.
சுந்தர் சி ஹீரோவாக முதன்முதலில் அறிமுகமானது 'தலைநகரம்' படத்தில் தான். சுராஜ் இயக்கிய இந்தப் படம் 2006ம் ஆண்டு வெளியானது. ரைட் என்ற ரவுடி கேரக்டரில் நடித்திருந்த சுந்தர் சி-க்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. தலைநகரம் படம் கொடுத்த நம்பிக்கையால் தொடர்ந்து நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், தலைநகரம் படத்தில் நடித்தது குறித்த அனுபவம் குறித்து சுந்தர் சி மனம் திறந்துள்ளார்.
தான் இயக்கிய அல்லது நடித்த படங்களை பார்க்கும் பழக்கமே எனக்கு கிடையாது என கூறியுள்ள சுந்தர் சி, தலைநகரம் புதிய அனுபவத்தை கொடுத்தது என்றுள்ளார். முதன்முறையாக ஹீரோவாக நடித்ததால் தலைநகரம் படம் வெளியாகும் போது ஊரில் இருக்கக் கூடாது என முடிவெடுத்த சுந்தர் சி, குடும்பத்துடன் அமெரிக்கா சென்றுவிட்டாராம். ரசிகர்கள் நம்மளையெல்லாம் ஹீரோவாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என இரண்டு மூன்று நாட்களுக்கு படத்தின் ரிசல்ட் குறித்து யாரிடமும் கேட்கவே இல்லையாம்.

ஆனால், மூன்று நாட்களுக்குப் பின்னர் தலைநகரம் இயக்குநர் சுராஜ் போனில் அழைத்து படம் சூப்பர் ஹிட் எனக் கூறினார். அதனைக் கேட்ட சுந்தர் சி-யால் தலைநகரம் ஹிட்டானதை நம்பவே முடியவில்லையாம். அதன்பிறகு சென்னை திரும்பிய சுந்தர் சி-யை உதயம் தியேட்டர் அழைத்துச் சென்றுள்ளார் சுராஜ். அங்கே சுந்தர் சி-க்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பைப் பார்த்து கண்கலங்கிவிட்டதாகக் கூறியுள்ளார்.
பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் படம் பார்த்ததைப் பார்த்து ரொம்பவே நெகிழ்ச்சியாக இருந்ததையும் சுந்தர் சி குறிப்பிட்டுள்ளார். மேலும், ஒண்ணும் இல்லாத நடிகர்களை ஒரே இரவில் தூக்கி விடுவதே ரசிகர்கள் தான். அவர்கள் இல்லாமல் நானும் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது. இது எல்லாமே அவர்கள் எனக்கு கொடுத்த அங்கீகாரம் என நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











