பேயை நம்பவில்லை.. ஆனா பேய்னா எனக்கும் பயம்தான்! - இயக்குநர் சுந்தர் சி
பேயை நான் நம்பவில்லை என்றாலும், பேய் என்றால் எனக்கும் பயம்தான் என்கிறார் இயக்குநர் சுந்தர் சி.
தீயா வேலை செய்யணும் குமாரு படத்திற்குப் பிறகு சுந்தர்.சி இயக்கி வரும் படம் அரண்மனை. முதல் முறையாக ஒரு பேய்ப் படத்தை இயக்குகிறார் சுந்தர். இப்போதைய ட்ரெண்ட் அப்படி இருப்பதால், பேய்க்கதைக்குப் போய்விட்டார் போலிருக்கிறது.
இந்தப் படத்தை சுந்தர்.சி இயக்குவதுடன் அதில் நடிக்கவும் செய்திருக்கிறார்.
அவருடன் வினய், சந்தானம், ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி நடித்திருக்கிறார்கள்.

பாடல்கள் வெளியீடு
திகில் கலந்த காமெடி படமாக உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் சுந்தர்.சி, வினய், ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி, மனோபாலா, சரவணன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக்கொண்டனர்.

ரூ 3 கோடி செலவில்
இப்படத்தைப் பற்றி சுந்தர்.சி பேசுகையில், ‘அரண்மனை' படம் சிறப்பாக வந்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்திற்காக ஹைதராபாத்திலிலுள்ள மணிகொண்டா என்ற இடத்தில் ரூ.3 கோடி செலவில் ஒரு அரண்மனையை கலை இயக்குனர் குருராஜ் உருவாக்கியுள்ளார். மிகப் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட அரண்மனையில் காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளது.

3 மாதங்களில்....
இப்படத்தின் படப்பிடிப்பு 3 மாதங்களில் முடிந்து விட்டது. தற்போது கிராபிக்ஸ் பணிகள் நடக்கின்றன. ரொம்ப கஷ்டப்பட்டு இந்த வேலைகளைச் செய்து வருகிறோம். பார்க்க கிராபிக்ஸ் மாதிரி எந்தக் காட்சியுமே தெரியாது.

என் குடும்பம்தான்
நான் திகில் படம் எடுப்பதற்கு காரணம் என் குடும்பம்தான். என்னை பிடித்துக் கொண்டுதான் என் மகளும் மனைவியும் பேய்ப் படம் பார்ப்பார்கள். பெண்கள் அதிகம் ரசிப்பதாலே இப்படம் உருவாக காரணம். பேயை நான் நம்பவில்லை. ஆனால் பேய் என்றால் எனக்கு பயம் என்றார்.

எப்போ ரிலீஸ்?
அரண்மனை படம் செப்டம்பர் 19-ம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளார் சுந்தர் சி.


Click it and Unblock the Notifications











