அரண்மனை 4 மற்ற பாகங்களை விட வேற மாதிரி இருக்கும்.. சுந்தர் சி சொன்ன சுவாரசியத் தகவல்!
சென்னை: சுந்தர்.சியின் அரண்மனை 4 படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் விழாவில் பேசிய சுந்தர் சி அரண்மனை 4 திரைப்படம் மற்ற பாகங்களைப் போல இல்லாமல் வேற மாதிரி திரைப்படமாக இருக்கும் என்றார். இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2014-ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் ஹன்சிகா, ஆன்ட்ரியா, வினய் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் அரண்மனை. இந்த படம் சக்கைப்போடு போட்டு வசூலை அள்ளியது. இந்த படத்தை தொடர்ந்து 2016ம் ஆண்டு அரண்மனை இரண்டாம் பாகம் வெளியானது. இதில், சித்தார்த், த்ரிஷா, கோவை சரளா, சூரி என பலர் நடித்திருந்தார்கள். இந்த படமும் வெற்றி பெற்றதால், 2021-ம் ஆண்டு இப்படத்தின் மூன்றாம் பாகம் வெளியானது. அதில், ஆர்யா, ராஷிகண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால், விவேக் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள் இந்த படம் சுமாராகத்தான் ஓடியது.

சுந்தர் சியின் அரண்மனை 4: தொடர்ந்து அதே அரண்மனை பேய் என அரைத்த மாவையே அரைத்துக்கொண்டு இருந்ததால், மூன்றாம் பாகம் மக்கள் மனதில் நிற்காமல் தோல்விப்படமாக அமைந்தது. இதையடுத்து, சுந்தர் சி மீண்டும் அரண்மனை நான்காம் பாகத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, சிங்கம்புலி, விடிவி கணேஷ், டெல்லி கணேஷ், ஜே பி, விச்சு, கேஜிஎஃப் ராம், சேசு, சந்தோஷ் பிரதாப், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹிப்ஹாப் ஆதி படத்துக்கு இசையமைத்துள்ளார்.
அரண்மனை 4 டிரைலர்: இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியானது, அதில், சுந்தர்.சியின் தங்கையான தமன்னாவின் மர்ம மரணம். அவரின் மரணத்துக்கு நீதி தேடும் வழக்கறிஞராக சுந்தர் சி நடித்துள்ளார். மேலும் முந்தைய படத்தில் இருந்த அதே அரண்மனையில் பேய், பேயை விரட்ட தீர்வு சொல்லும் சாமியார் என வழக்கமான அதே விஷயமே படத்தில் இருப்பது டிரைலரை பார்த்தாலே தெரிகிறது.
வேற மாதிரி கதை: டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய சுந்தர் சி, அரண்மனை திரைப்படம் என் வாழ்க்கையில் முக்கியமான படமாகும், அரண்மனை முதல் பாகம் எடுக்கும் போது, அடுத்தடுத்த பாகங்களை இயக்கும் எண்ணம் என்னிடம் இல்லை. ஆனால், அரண்மனை படத்திற்கு மக்களிடம் இருந்து வந்த ஆதரவும், வரவேற்பும் என்னை அடுத்தடுத்து பாகங்களை எடுக்க வைத்தது. மேலும், அரண்மனை 4 திரைப்படம் மற்ற பாகத்தை போல் இல்லாமல், கதை, கிராபிக்ஸ், விஷுவல் எபெக்ட்ஸ் என அனைத்திலும் வித்தியாசமானதாக இருக்கும்.
பேய் பயம்: ஒரு கதை குறித்து கோ ரைட்டர் கீர்த்தியுடன் பேசிக்கொண்டு இருக்கும் போது, அவர், ஒரு விஷயம் சொன்னார். இந்தியாவின் பெரும் பகுதியை ஆண்ட மன்னர்கள், பல்வேறு பகுதிக்குப் படை எடுத்திருக்கிறார்கள். ஆனால், கிழக்குப் பகுதியில் பிரம்மபுத்திரா நதியை தாண்டி யாரும் போகவில்லை. அதற்கு பல காரணங்களை சொல்கிறார்கள். அதில் ஒன்று பேய், மற்றொன்று பாக் என்றார். அதுதான் அரண்மனை 4 என சுந்தர் சி தெரிவித்துள்ளார்.
காரணம் இதுதான்: தொடர்ந்து பேசிய சுந்தர் சி அரண்மனை 4 படத்தில் விஜய் சேதுபதி தான் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தார். ஆனால், அவர் அந்த நேரத்தில் படத்தில் பிஸியாக இருந்ததால், அவர் இப்படத்தில் இருந்து விலகிவிட்டார் பின் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்கள் கேட்டுக் கொண்டதை அடுத்து, இப்படத்தில் ஹீரோவாக நடித்ததாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











