கணவர் கொடுமைப்படுத்துகிறார்.. உதவி ஆய்வாளர்களும் உடந்தை.. சுந்தரா ட்ராவல்ஸ் நடிகை மீண்டும் புகார்!
சென்னை: கணவர் மீண்டும் கொடுமைப்படுத்துவதாகவும் அவருக்கு விருகம்பாக்கம் உதவி ஆய்வாளர்கள் உடந்தையாக இருப்பதாகவும் சுந்தரா ட்ராவல்ஸ் பட நடிகையான ராதா புகார் அளித்துள்ளார்.
Recommended Video
"சுந்தரா டிராவல்ஸ்" உள்பட பல படங்களில் நடித்தவர் நடிகை ராதா. இவர் கடந்த ஏப்ரல் மாதம் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் தனது கணவரான எஸ்.ஐ. வசந்தராஜா மீது புகார் அளித்தார்.
தனது கணவர் தன்னுடைய நடத்தையில் சந்தேகப்பட்டு அடித்துத் துன்புறுத்தியதாக புகார் கொடுத்தார். ஆனால் தான் அளித்த புகாரை அடுத்த நாளே திரும்ப பெற்றார் ராதா.

மண்டல இணை ஆணையர்
இந்நிலையில் சென்னை ஆலந்தூர் காவல்துறை தெற்கு மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் நடிகை ராதா இன்று புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், "கடந்த மே மாதம் விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் எனது கணவர் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் வசந்தராஜா மீது புகார் கொடுத்தேன்.

எழுதி கொடுத்த வசந்தராஜா
ஆனால் புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. உதவி ஆய்வாளர் பாரதி என்னையும் வசந்தராஜாவையும் அழைத்து சமாதானம் செய்து வைத்தார். இனிமேல் ஒன்றாக இணைந்து வாழ்வதாக கூறி வசந்தராஜா எழுதி கொடுத்தார்.

கொலை மிரட்டல்
ஆனால் தற்போது மீண்டும் என்னை கொடுமைப் படுத்துகிறார். என்னை பற்றி புகார் கொடுத்தால் என்ன செய்ய முடியும் என கொலை மிரட்டல் விடுக்கிறார். உதவி ஆய்வாளர்கள் பாரதியும், இளம்பரிதியும் என்னுடைய ஆட்கள். உன்னால் ஒன்றும் செய்யமுடியாது என கூறி மிரட்டி வருகிறார்.

கடிதத்தை கேட்டேன்
காவல் நிலையத்தில் ஒன்றாக வாழ்வதாக எழுதி கொடுத்துவிட்டு ஏன் இப்படி செய்கிறீர்கள் என கேட்டால் தொடர்ந்து மிரட்டுகிறார். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் என்னுடைய புகார் குறித்தும் வசந்தராஜா எழுதி கொடுத்த கடிதத்தை கேட்டேன்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஆனால் கடிதத்தை தரவில்லை. சட்டத்திற்கு முரணாக நடந்து கொண்ட உதவி ஆய்வாளர்கள் பாரதி, இளம்பரிதி மீது காவல்துறை ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னை அடித்து துன்புறுத்திய உதவி ஆய்வாளர் வசந்த ராஜா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு நடிகை ராதா புகாரில் கூறியுள்ளார்.

மீண்டும் புகார் பரபரப்பு
நடிகை ராதா கடந்த வாரம் வசந்தராஜா தனக்கு கொலை மிரட்டல் கொடுப்பதாக ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்நிலையில் இன்று ஆலந்தூர் காவல்துறை தெற்கு மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











