சிஐடி ஏஜென்ட்.. வெப் சீரிஸில் சந்தீப் கிஷனுடன் ஜோடி சேரும் நடிகை பிரியாமணி
சென்னை: உளவுத்துறை ஏஜென்ட்டுகளின் திரைமறைவு நடவடிக்கைகளை மையமாக வைத்து எடுக்கப்படும் வெப் சீரீஸில் நடிகர் சந்தீப் கிஷன் நடிக்க உள்ளார். இவருடன் நடிகை பிரியாமணியும் நடிக்க உள்ளார் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
1990களில் இந்தியாவில் தனியார் தொலைக்காட்சிகள் நுழைந்தபோது, பெரிய திரை நட்சத்திரங்களிடம் இருந்து பலத்த எதிர்ப்பு எழுந்தது. தனியார் தொலைக்காட்சிகளால் சினிமா உலகமே அழிந்து விடும். எனவே இதனை தடைசெய்யவேண்டும் என்று பலத்த எதிர்ப்புகளும் எழுந்தன. ஆனால் நாளடைவில் அந்த எதிர்ப்பு குரல்கள் அடங்கிப்போயின.

அதற்கு மாறாக சினிமாவில் கோலோச்சிக்கொண்டிருந்த இயக்குநர் சிகரம் பாலச்சந்தரே இறங்கி வந்து, சின்னத் திரைகளில் குறுந்தொடர்களை எடுக்க ஆரம்பித்தார். அவர் போட்டுக்கொடுத்த பாதையில் மற்ற இயக்குநர்களும், சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு, டிவி சீரியல்களில் கவனம் செலுத்தி வெற்றிக்கொடியும் நாட்டி வருகின்றனர்.
ஆனால், இப்போது தனியார் டிவிக்களில் ஒளிபரப்பப்படும் சீரியல்கள் எல்லாம், பார்வையாளர்கன் பிளட் பிரஸர்களை அதிகரிக்கச்செய்யும் விதமாகவே இருப்பதால், இதற்கு மாற்றாக ஏதாவது வராதா என்று ஏக்கத்தில் இருந்தனர். அவர்களின் ஏக்கத்தை போக்கும் விதமாகவே, இப்போது புது ட்ரெண்டாக ஐந்து முதல் 12 வாரங்களே ஒளிபரப்பாகும் வகையில் வெப் சீரிஸ்கள் வர ஆரம்பித்துவிட்டன.
வெப்சீரிஸ்கள் இந்தியாவில் முதலில் இந்தியில் தான் ஆரம்பிக்கப்பட்டன. அது இப்போது தமிழ்நாட்டிற்கும் வந்துவிட்டது. இதில் பல முன்னணி நடிகர்களும் நடிகைகளும் போட்டி போட்டுக்கொண்டு நடிக்க ஆரம்பித்து விட்டனர். குறிப்பாக நடிகை சமந்தா, பிரயாமணி, நித்யா மேனன் உள்ளிட்ட பலரும் வெப் சீரிஸில் நடிக்க போட்டி போட்டுவருகின்றனர். ஆனால் முன்னணி நடிகர்கள் பலர் வரத் தயங்குகின்றனர்.
நடிகர்களில் இப்போது பிரசன்னா வெப் சீரிஸில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். அதே போல் நடிகர் சந்தீப் கிஷனும் வெப் சீரிஸில் நடிக்க முன்வந்துள்ளார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகராக உள்ளார். அவர் யாருடா மகேஷ் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனார்.
மேலும் இயக்குனர் சி.வி.குமார் இயக்கிய மாயவன் என்ற அறிவியல் புனைக்கதை திரைப்படங்களிலும் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் முதல் திரைப்படமான மாநகரம் மூலம் தமிழில் பிரபலம் ஆனார். மேலும் அவர் நடித்த நரகாசுரன் திரைப்படம் வெளிவரும் தேதி தாமதமாகவே இருக்கிறது.
முன்னதாக உள்குத்து மற்றும் திருடன் போலீஸ் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் கார்த்திக் ராஜு இயக்கிய கண்ணாடி திரைப்படம் தெலுங்கில் ஒரு மாதத்திற்கு முன்பு வெளியிடப்பட்டது. இயக்குனர்கள் ராஜ் மற்றும் டி.கே இயக்கும் ஏ ஃபேமிலி மேன் வெப் செரிஸ் அமேசான் பிரைமில் வரவிருக்கிறது. அதில் ஒரு பகுதியாக நடிகர் சந்தீப் கிஷன் இருப்பார் என்பது இப்போது தெரிய வந்துள்ளது.
மேலும் உளவுத்துறை ஏஜென்ட்டை அடிப்படையாகக் கொண்ட இந்த வெப் சீரிஸில் நடிகை பிரியாமணி மற்றும் நடிகர் மனோஜ் பாஜ்பாய் ஆகியோரும் முக்கியமான வேடங்களில் நடிக்கவுள்ளனர். சந்தீப் கிஷன் ஏற்கனவே அமேசான் பிரைமுக்காக ஏ ஃபேமிலி மேன் (A Family Man) என்ற இந்தி வெப் சீரிஸில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











