தரமற்ற அரிசி இருந்ததா?.. ஹோட்டலில் நடந்த ரெய்டு குறித்து மனம் திறந்த ராயன் பட நடிகர்
ஹைதராபாத்: நடிகர் சந்தீப் கிஷன் கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் ஃபேமஸான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். கைவசம் இப்போது சில படங்களை வைத்திருக்கும் அவர் தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் சொந்தமாக ஹோட்டல் ஒன்றை நடத்திவருகிறார். கடந்த சில வருடங்களாக இந்தத் தொழிலை செய்துவரும் அவர்; சில நாட்களுக்கு முன்பு ஒரு சர்ச்சையில் சிக்கினார். இப்போது அதுகுறித்து விளக்கமளித்திருக்கிறார் சந்தீப் கிஷன்.
தெலுங்கில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான பிரஸ்தனம் என்ற படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்து சினிமாவில் அறிமுகமானார் சந்தீப் கிஷன். அதற்கு பிறகு சிநேக கீதம் என்ற படத்தில் ஹீரோவாக நடித்த அவர்; ஹிந்தியிலும் அறிமுகமானார். அதற்கு பிறகு தெலுங்கில் வரிசையாக படங்களில் நடித்துவந்த அவர்; கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான யாருடா மகேஷ் என்ற படத்தில் தமிழில் அறிமுகமானார். அந்தப் படம் அவருக்கு சொல்லிக்கொள்ளும்படியான வெற்றியை பெற்றுத்தரவில்லை.

மாநகரம் சந்தீப்: தமிழில் முதல் படம் போதிய வரவேற்பை பெறாததால் மீண்டும் தெலுங்குக்கு சென்று அங்கு கவனம் செலுத்திவந்தார். நிலைமை இப்படி இருக்க இப்போது மோஸ்ட் வாண்டட் இயக்குநராக இருக்கும் லோகேஷ் கனகராஜ் மாநகரம் என்ற படத்தை முதலில் இயக்கினார். அதில் ஸ்ரீயுடன் இணைந்து முக்கியமான கதாபாத்திரத்தில் தோன்றினார் சந்தீப் கிஷன். அந்தப் படம் மெகா ஹிட்டானது. அந்த வெற்றி லோகேஷ் கனகராஜுக்கு மட்டுமின்றி சந்தீப் கிஷனுக்கும் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.
பிஸி நடிகர்: மாநகரம் படம் தந்த வெற்றியைத் தொடர்ந்து தமிழிலும் வாய்ப்புகளை பெற ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் கசடதபற உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் தெலுங்கில் படு பிஸி. சூழல் இப்படி இருக்க அவரது நடிப்பில் கடைசியாக கேப்டன் மில்லர் படம் வெளியானது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷுடன் இணைந்து முக்கியமான ரோலில் நடித்து கவனம் ஈர்த்தார். அந்தப் படமும் சுமாரான வரவேற்பையே பெற்றது.
ராயன்: அந்தப் படத்தின்போது சந்தீப்புக்கும் தனுஷுக்கு ஏற்பட்ட பழக்கம்; அவருக்கு ராயன் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றுக்கொடுத்திருக்கிறது.தனுஷின் 50ஆவது படமாக உருவாகியிருக்கும் ராயன் படம் ஜூலை 26ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இந்தப் படத்திலும் சந்தீப்பின் ரோல் கண்டிப்பாக பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே அவர் தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் ஹோட்டல் ஒன்றை நடத்திவருகிறார்.
சந்தீப்பின் விளக்கம்: அந்த ஹோட்டலில் சமீபத்தில் சுகாதாரத் துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். அப்போது தரமற்ற அரிசி அங்கு இருந்ததாகவும்; அதனையொட்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்திருக்கும் சந்தீப் கிஷன், " என்னுடைய ஹோட்டலில் அதிகாரிகள் எடுத்ததாக சொல்லி புகைப்படங்கள் சில வெளியாகியிருக்கின்றன. ஆனால் அந்தப் புகைப்படங்கள் எங்கள் ஹோட்டலில் எடுக்கப்பட்டதே இல்லை.
சரி இல்லை: அதுமட்டுமின்றி 2022ஆம் ஆண்டு வாங்கப்பட்டதாக சொல்லப்படும் அந்த அரிசி மூட்டை நாங்கள் தர சோதனைக்காக வாங்கினோம். அது சரி இல்லை என்று தெரிந்ததும் அதை பயன்படுத்தாமல் அப்படியே வைத்துவிட்டோம். சுகாதார விதிமுறைகளை நாங்கள் சரியாக பின்பற்றிதான் இந்த ஹோட்டலை நடத்திவருகிறோம். உங்களது அன்பை ஒருபோதும் நாங்கள் இழக்கமாட்டோம்"" என்றார்.


Click it and Unblock the Notifications











