இன்னொரு மாநாடு வருதா... அப்போ திரும்பவும் ரிப்பீட்டா?: வெங்கட் பிரபு இயக்கத்தில் கிச்சா சுதீப்!
மும்பை: கன்னட திரையுலகின் பாதுஷா என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் கிச்சா சுதீப்.
கிச்சா சுதீப் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள 'விக்ராந்த் ரோணா' நாளை 28ம் தேதி வெளியாகிறது.
மும்பையில் நடைபெற்ற 'விக்ராந்த் ரோணா' ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய கிச்சா சுதீப், வெங்கட் பிரபுவுடன் இணைவது குறித்து சூப்பர் அப்டேட் கொடுத்துள்ளார்.

பாதுஷா
கன்னட திரையுலகின் மாஸ் ஹீரோக்களில் மிக முக்கியமானவர் கிச்சா சுதீப். இவரது திரைப்படங்கள் வெளியாகும் போது, ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடித் தீர்த்து விடுவார்கள். கன்னடம் மட்டுமல்லாமல் தெலுங்கு, தமிழ் படங்களிலும் நடித்து மாஸ் காட்டியுள்ளார். குறிப்பாக ராஜமெளலியின் 'ஈ' படத்தில் நடித்தப் பிறகு, கிச்சா சுதீப்பை தெரியாத தமிழ் ரசிகர்கள் இருக்க முடியாது.

விஜய்யுடன் புலி
தமிழில் சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்த 'புலி' படத்தில், வில்லனாக நடித்திருந்தார். இந்தப் படம் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. ஆனாலும், கிச்சா சுதிப்பீன் நடிப்பை பலரும் பாராட்டியிருந்தனர். தமிழில் குறைவான படங்களில் நடித்திருந்தாலும், தமிழ் இயக்குநர்கள், நடிகர்களுடன் கிச்சா சுதீப்புக்கு நெருங்கிய நட்பு உண்டு.

விக்ராந்த் ரோணா
இந்த நிலையில், கிச்சா சுதீப் ஹீரோவாக நடித்துள்ள 'விக்ராந்த் ரோணா' திரைப்படம் நாளை வெளியாகிறது. அனூப் பண்டாரி இயக்கியுள்ள இந்தப் படம், 3டி தொழில்நுட்பத்தில் பான் இந்தியா படமாக வெளியாகவிருக்கிறது. மிரட்டலான சர்வைவல் திரில்லர் படமாக இருந்தாலும், இது குழந்தைகளை குஷிப்படுத்தும் எனக் கூறப்படுகிறது. 'விக்ராந்த் ரோணா' ரிலீஸுக்காக, கிச்சா சுதீப் ரசிகர்கள் மரண வெயிட்டிங்கில் இருக்கின்றனர்.

சல்மான்கானுடன் கூட்டணி
கன்னடம், தமிழ், தெலுங்கு என பான் இந்தியா படமாக வெளியாகும் 'விக்ராந்த் ரோணா' படத்தை, இந்தியில் சல்மான் கான் வெளியிடுகிறார். இதனால் மும்பையில் நடைபெற்ற ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கிச்சா சுதீப், அவரது அடுத்தடுத்த படங்கள் பத்தின சூப்பர் அப்டேட்களை பேசினார்.

வெங்கட் பிரபுவுடன் கூட்டணி
விரைவில் இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் இணையவுள்ளதாகக் கூறிய கிச்சா சுதீப், அதற்குள் ஓரிரு படங்களில் நடித்துவிடுவேன் எனத் தெரிவித்துள்ளார். வெங்கட் பிரபு தற்போது நாகசைதன்யா நடிப்பில், புதிய படத்தை இயக்கி வருகிறார். க்ரித்தி ஷெட்டி நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு, இளையராஜாவும் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இசையமைக்கின்றனர்.

மாநாடு ரிப்பீட்டு
இதனைத் தொடர்ந்து கிச்சா சுதீப் நடிக்கும் படத்தை வெங்கட் பிரபு இயக்குவார் என சொல்லப்படுகிறது. இத்திரைப்படம், சிம்புவின் நடிப்பில் மெகா ஹிட் அடித்த 'மாநாடு' படத்தின் ரீமேக்காக இருக்கும் எனத் தெரிகிறது. ஆனால், ரசிகர்களோ மாநாடு செகண்ட் பார்ட்டாக அந்தப் படம் இருக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











