Super Singer Aruna - பாடி முடிச்சதும் என்ன சாதி என கேட்டார்கள்.. சூப்பர் சிங்கர் அருணா கொடுத்த ஷாக்
சென்னை: Super Singer Aruna (சூப்பர் சிங்கர் அருணா) பாடல் பாடிய பிறகு என்ன சாதி என என்னை கேட்டார்கள் என சூப்பர் சிங்கர் 9ஆவது சீசன் டைட்டில் வின்னர் அருணா பேசிய வீடியோ ட்ரெண்டாகியுள்ளது.
சின்னத்திரையில் நடத்தப்படும் நிகழ்ச்சிக்கென்று ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றன. குறிப்பாக விஜய் டிவியில் நடத்தப்படும் ஷோக்களுக்கு தமிழ்நாட்டில் பல ரசிகர்கள் உண்டு. அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் சூப்பர் சிங்கர். பாடல் பாடும் திறமையாளர்களை கண்டெடுத்து அவர்களது திறமையை பலருக்கும் வெளிச்சம் போட்டு காட்டுவதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம். இதில் டைட்டில் அடித்துவிட்டால் சினிமா, கச்சேரி என பல இடங்களில் பாடுவதற்கு கதவுகள் எளிதாக திறக்கும் என்ற நிலை இருக்கிறது.
9ஆவது சீசன்: இதுவரை 8 சீசன்கள் நடைபெற்றிருக்கின்றன. ஒன்பதாவது சீசன் கடந்த சில மாதங்களாக நடந்துவந்தது. போட்டியாளர்களாக ஏராளமானோர் கலந்துகொண்டாலும் அருணா, அபிஜித், பூஜா, பிரசன்னா, பிரியா ஜெர்சன் ஆகிய ஐந்து பேரும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர். ஐந்து பேருமே இந்த சீசனின் ஆரம்பத்திலிருந்தே மிகச்சிறப்பாக பாடியவர்கள் என்பதால் இறுதிப்போட்டியில் அனல் பறக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

இறுதிப்போட்டி: சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நேற்று இறுதிப்போட்டி நடந்தது. ஹாரிஸ் ஜெயராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அந்த இறுதிப்போட்டி நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. பல சுற்றுக்களாக நடைபெற்ற இறுதிப்போட்டி ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே அனல் பறந்தது. ஐந்து பேரும் தங்களது முழு திறனையும் வெளிப்படுத்தி பாடினர். இதன் காரணமாக பார்ப்பதற்கே சுவாரசியமாக இருந்தது.
அருணா வின்னர்: சிறப்பாக பாடிய மயிலாடுதுறையை சேர்ந்த அருணா சூப்பர் சிங்கர் 9ஆவது சீசனின் டைட்டிலை வென்று அசத்தினார். அவருக்கு 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது. ரசிகர்களின் வாக்குகள், நடுவர்களின் மதிப்பெண்களை வைத்து அவர் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். முதல் ரன்னர் அப்பாக ப்ரியா ஜெர்சன், இரண்டாவது ரன்னர் அப்பாக பிரசன்னா ஆதிசேஷன், மூன்றாவது ரன்னர் அப்பாக பூஜா வெங்கட்ராமன் தேர்வு செய்யப்பட்டனர்.
ட்ரெண்டாகும் வீடியோ: இந்நிலையில் அருணா பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அந்த வீடியோவில் அவர், "நான் கோவில்களில் பாட செல்லும்போதெல்லாம், பாடி முடித்த பின் ஒருத்தர், இரண்டு பேர் என்னிடம் கேட்கும் முதல் கேள்வியே நீங்கள் என்ன சாதி என்பதுதான். அதை வெளியே சொன்னால் அடுத்தது நம்மை பாட விட மாட்டார்களோ என்ற பயம் எனக்குள் இருக்கும். அதனால் வெளியே சொல்லாமல் தவித்து பயந்து பயந்து இருந்திருக்கிறேன். ஆனால் இனி எந்த மூலைக்கும் சென்று பாடுவேன், எனக்கு பயம் கிடையாது" என்றார்.
முதல் பெண்: இதுவரை நடந்த சூப்பர் சிங்கரின் 8 சீசன்களிலும் ஆண்கள் மட்டுமே டைட்டிலை தட்டி சென்றிருக்கின்றனர். ஒன்பதாவது சீசனில் டைட்டிலை வென்றதன் மூலம் சூப்பர் சிங்கர் டைட்டிலை வெல்லும் முதல் பெண் என்ற பெருமையை பெறுகிறார் அருணா. டைட்டில் வின்னராக மாறிவிட்டார் என்பதால் விரைவில் திரைத்துறையில் இவர் குரல் ஒலிப்பதை கேட்கலாம்.


Click it and Unblock the Notifications











