Rajinikanth: நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான்.. கை விட மாட்டான்.. சூப்பர் ஸ்டாரின் புத்தாண்டு வாழ்த்து
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் அடையாளமாக உயர்ந்து நிற்கின்றார். இன்றைக்கு உலகமே 2025ஆம் ஆண்டினை வரவேற்றுக் கொண்டு இருக்கும் தருவாயில், அனைவருக்கும் தனது ஸ்டைலில் மாஸாகவும் கெத்தாகவும் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அவரது புத்தாண்டு வாழ்த்து ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக, பாட்ஷா படத்தில் அவர் பேசும் மிகவும் வரவேற்பைப் பெற்ற வசனத்தைக் குறிப்பிட்டு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதாவது, "நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். கை விட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனா கை விட்டுடுவான். புத்தாண்டு நல்வாழ்த்துகள்" என பதிவிட்டுள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. அதேபோல் சூப்பர் ஸ்டாரின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சூப்பர் ஸ்டார் நடிப்பில் கடந்த ஆண்டு வேட்டையன் படம் ரிலீஸ் ஆகி பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக படம் பேசிய அரசியல் பலரது கவனத்தினை ஈர்த்தது மட்டும் இல்லாமல், அரசியல் தளத்தில் விவாதத்தையும் ஏற்படுத்தியது. படத்தினை ரசிகர்கள் கொண்டாடினார்கள். அதேபோல் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் லால் சலாம் என்ற படத்தில் ஒரு எக்ஸ்டண்டட் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்தார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசும்போது, தனது தந்தை சங்கி கிடையாது எனவும், அவர் ஒரு சங்கி என்றால், இந்தக் கதாபாத்திரத்தில் அவர் நடித்திருக்கவே மாட்டார் எனவும் கூறினார்.

கடந்த ஆண்டில் இவரது நடிப்பில் இரண்டு படங்கள் ரிலீஸ் ஆனது. இந்த இரண்டு படங்களும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதிலும் குறிப்பாக ரஜினிகாந்த்தின் கதாபாத்திரங்கள் பாராட்டிப் பேசப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டில் அதாவது 2025ஆம் ஆண்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிப்பில் இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
50 ஆண்டு திரை வாழ்க்கை: இதில் முதலில் கூலி படம் ரிலீஸ் ஆகவுள்ளது. அதன் பின்னர் ஆண்டு இறுதியில் ஜெயிலர் 2 படம் ரிலீஸ் ஆகவுள்ளது என கூறப்படுகின்றது. இதில் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை என்பதால், படத்தினை இந்த ஆண்டுக்குள் ரிலீஸ் செய்வார்களா என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. 2025ஆம் ஆண்டுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து 50 ஆண்டுகள் ஆகின்றது. எனவே இதனைக் கொண்டாடவே, இரண்டு படங்களை ரிலீஸ் செய்ய சூப்பர் ஸ்டார் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
சோதனை ஆண்டு: கடந்த ஆண்டு இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகி இருந்தாலும், சூப்பர் ஸ்டாருக்கு கடந்த ஆண்டு ஒரு சோதனையான ஆண்டாகத்தான் அமைந்துவிட்டது. குறிப்பாக, தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திற்கும் தனுஷ்க்கும் விவாகரத்து ஏற்பட்டது. ஏற்கனவே இருவரும் விவாகரத்திற்கு விண்ணப்பித்திருந்தாலும், இருவரையும் ஒருசேர அமரவைத்து, சூப்பர் ஸ்டார் எவ்வளவோ பரஸ்பரம் பேசியதாகவும், ஆனால் அவை எதுவுமே கை கொடுக்கவில்லை எனவும் பேச்சு அடிபடுகின்றது.

அறுவை சிகிச்சை: மேலும் கடந்த ஆண்டில் சூப்பர் ஸ்டார் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இது அவரது ரசிகர்களை பெரும் மன வருத்தத்தில் ஆழ்த்தியது. மேலும் சூப்பர் ஸ்டாருக்கு இப்படியொரு நிலை ஏற்படக் காரணமே, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தான் என ரசிகர்கள் மத்தியில் பேச்சு எழுந்தது. ஆனால், செய்தியாளர்களைச் சந்தித்த லோகேஷ் கனகராஜ், சூப்பர் ஸ்டாருக்கு நடைபெற்ற, அறுவை சிகிச்சை ஏற்கனவே திட்டமிடப்பட்டதுதான் எனக் கூறிய பின்னர்தான், ரசிகர்கள் அமைதியானார்கள்.
புத்தாண்டு வாழ்த்து: இவற்றையெல்லாம் குறிக்கும் வகையில்தான், நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். கை விட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனா கை விட்டுடுவான். புத்தாண்டு நல்வாழ்த்துகள்" என பதிவிட்டுள்ளார் என ரசிகர்கள் மத்தியில் பேச்சு அடிபடுகின்றது. 2025ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டாருக்கு சிறப்பாக அமைய பிலிமி பீட் சார்பாக வாழ்த்துகள்.


Click it and Unblock the Notifications











