Rajinikanth: ஸ்கூல் ஃபீஸ் உடன் தமிழ்நாட்டிற்கு ஓடிவந்த ரஜினிகாந்த்.. அட இது சுவாரஸ்யமா இருக்கே!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாளை அதாவது டிசம்பர் 12ஆம் தேதி தனது 74வது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ளார். இதற்காக அவருக்கு வாழ்த்து கூற உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்துக் கொண்டு உள்ளனர். இப்படியான நிலையில், அவர் தற்போது நடித்துக் கொண்டு இருக்கும் கூலி படத்தின் அப்டேட் இன்று நள்ளிரவு 12 மணிக்கோ அல்லது நாளை மாலையோ வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது. இப்படியான நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னைக்கு அதாவது தமிழ்நாட்டிற்கு முதல் முறையாக வந்த நிகழ்வு குறித்த தகவல்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து திரைக்கு அப்பாற்பட்ட விஷயம் என்றால் அது, அவர் பஸ் கண்டக்டர் என்பதுதான். பேருந்தில் நடத்துனராக இருந்து, அதன் பின்னர் நாடகத்தில் முயற்சி செய்து, அதன் பின்னர் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் ரஜினிகாந்த். இன்றைக்கு தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வளர்ந்து நிற்கின்றார். தமிழ்நாட்டின் எந்த கிராமத்திற்குச் சென்றாலும் அங்கு சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் ஏராளமானோர் இருப்பார்கள் எனக் கூறும் அளவிற்கு ரசிகர்கள் பட்டாளத்தை சேகரித்து வைத்துள்ளார்.
இதுமட்டும் இல்லாமல், வருகின்ற 2025ஆம் ஆண்டு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தமிழ் சினிமாவில் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கி 50 ஆண்டுகளை நிறைவு செய்கின்றார். இதற்காக தமிழ் திரைப்படத் துறை சார்பில் அவருக்கு விழா நடத்துவார்கள் எனக் கூறப்படுகின்றது. அதேநேரத்தில் ரசிகர்களுக்காக ரஜினிகாந்த் தரப்பில் இருந்து, அடுத்த ஆண்டு இரண்டு படங்களை ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

திட்டம்: இப்படியான நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடர்பாக பல சுவாரஸ்யமான விஷயங்களை ரசிகர்கள் தேடித் தேடி படித்துக் கொண்டும் பார்த்துக் கொண்டும் உள்ளார்கள். இப்படியான நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், முதன் முதலில் சென்னைக்கு வந்தது குறித்து பலருக்கும் தெரியாது. அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம். அதாவது, ரஜினிகாந்த் அப்போது சிவாஜிராவ் கெய்க்வாட். 10வது படித்துக் கொண்டு இருந்த காலகட்டம். பள்ளியில் கட்டணம் செலுத்தச் சொல்லி அவரது அண்ணன், ரூபாய் 160 கொடுத்துள்ளார். ஆனால் சிவாஜி ராவ்க்கு படிப்பதில் ஆர்வமே இல்லை. மாறாக எதாவது தொழில் செய்வதில்தான் ஆர்வமே. எனவே பணத்தை பள்ளியில் கட்டுவது வீண் என யோசித்துள்ளார்.

ஸ்கூல் ஃபீஸ்: படிப்பின் மீது அக்கறை இல்லாத, சிவாஜிராவ் கெய்க்வாட், தனது அண்ணன் கொடுத்த ரூபாய் 160 பணத்தை வாங்கிக் கொண்டு, இரவு உணவை குடும்பத்தினருடன் அமர்ந்து சாப்பிட்டுவிட்டு, அனைவரும் தூங்கிய பின்னர், வீட்டில் இருந்து யாருக்கும் தெரியாமல் ஓடிவந்துவிட்டார். வந்தவர் நேராக பெங்களூரு ரயில்வே நிலையத்திற்கு வந்துள்ளார். அவர் வந்த நேரத்தில், சென்னை செல்வதற்கான ரயில் நின்றுகொண்டு இருந்துள்ளது. சென்னைக்கு டிக்கெட் வாங்கிய சிவாஜிராவ், ரயிலில் ஏறி அமர்ந்தும் கொண்டார்.

முதல் அனுபவம்: ரயில் சென்னை வந்ததும், கடவுளை வேண்டிக்கொண்டு சென்னையில் காலடி எடுத்துவைத்துள்ளார். அப்போது ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர் பயணிகளின் டிக்கெட்டினை சரிபார்த்துக் கொண்டு இருந்தார். சிவாஜி ராவ் தனது டிக்கெட்டினை தேடும்போதுதான் டிக்கெட் எங்கோ தொலைந்துவிட்டது என்பது புரியவந்துள்ளது. டிக்கெட் பரிசோதகரிடம் சென்ற சிவாஜிராவ், தான் எடுத்த டிக்கெட் தொலைந்துவிட்டதாக கூறியுள்ளார். இதைக் கேட்ட டிக்கெட் பரிசோதகர், சிவாஜி ராவை, கொஞ்சம் ஓரமாக நிற்கச் சொல்லியுள்ளார். நீண்ட நேரம் ஓரமாக நின்று கொண்டு இருந்ததைப் பார்த்த, சுமை தூக்கும் தொழிலாளர்கள், டிக்கெட் பரிசோதகரிடம் பேசி, சிவாஜி ராவை அதாவது, ரஜினியை ரயில் நிலையத்தில் இருந்து வெளியேற உதவி செய்துள்ளனர். ரஜினி சென்னைக்கு வந்து இறங்கியதும் எதிர்கொண்ட முதல் அனுபவம் இதுதான்.



Click it and Unblock the Notifications











