Rajinikanth: ஏன் காலில் விழுந்தேன்? ரஜினிகாந்த் விளக்கம்!
சென்னை: உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், காலில் விழுந்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் சென்னை வந்த ரஜினிகாந்த் அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ந் தேதி வெளியானது. படத்தை ரசிகர்கள் திரையரங்கில் திருவிழாப்போல கொண்டாடினர்.

ஜெயிலர் திரைப்படம் வெளியான 6 நாட்களில் 400 கோடியை எட்டி விட்டதாக கூறப்பட்டது.
இமயமலை பயணம்: ஜெயிலர் படம் வெளியாவதற்கு முன்பே ஆன்மீகப் பயணமாக இமயமலை சென்ற ரஜினி ரிஷிகேஷில் உள்ள தயானந்த சரஸ்வதி அவர்களுடைய சமாதியில் சென்று வணங்கி அங்கிருந்து தனது பயணத்தை துவங்கினார். இதையடுத்து, பத்ரிநாத் கோயிலுக்கு சென்று அங்கு ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படம், இணையத்தில் அதிகம் பகிரப்பட்டது.
பாபாஜி குகையில் தியானம்: அதன்பின், கரடு முரடான மலைப்பாதையில் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக நடந்து சென்று பாபாஜி குகையில் தியானம் செய்துள்ளார். ஆன்மீக தலங்களுக்கு சென்று வழிபட்ட ரஜினிகாந்த், முதலில் உபி துணை முதலமைச்சர் கேசவ பிரசாத் மவுரியாவுடன் இணைந்து ஜெயிலர் படத்தை பார்த்தார்.
யோகி காலில் விழுந்தார்: அதன்பின் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை ரஜினிகாந்த் அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது யோகியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். இந்த புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி ரணகளப்படுத்தியது. 72 வயதாகும் ரஜினி தன்னைவிட வயதில் குறைந்த முதல்வர் காலில் விழுந்தது ஏன் என்றும், ரஜினி அரசியல் கட்சி தொடங்கி இருந்தால், இப்படித்தான் இருந்து இருக்கும் என்றும் பலவிதமான கருத்துக்கள் இணையத்தில் பரவியது.

ரஜினி பேட்டி: இந்நிலையில்,நேற்றிவு சென்னை திரும்பிய ரஜினிகாந்த் விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அதில், நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இமயமலைக்கு சென்றது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஜெயிலர் படத்தை மாபெரும் வெற்றிப்படமாக்கிய, என்னை வாழவைத்த தமிழ் ரசிகர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எவ்வளவு பணம் செலவு ஆனாலும் பரவாயில்லை, நல்ல படத்தை கொடுங்க என்று ஊக்குவித்த கலாநிதி மாறன் அவர்களுக்கும், ஒவ்வொரு காட்சியையும் ரசித்து ரசித்து எடுத்த நெல்சன் அவர்களுக்கும் என் நன்றி என்றார்.
ஏன் காலில் விழுந்தேன்? அப்போது, செய்தியாளர்கள் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த நடிகர் ரஜினிகாந்த், சந்நியாசிகள், யோகிகள் என்னை விட வயதில் குறைவானவர்களாக இருந்தாலும், அவர்களின் காலில் விழுவது எனது பழக்கம். அதைத்தான் நான் செய்தேன் என்று கூறினார்.


Click it and Unblock the Notifications











