விஜய்காக குரல் கொடுத்த ரஜினி.. வன்மையாக கண்டித்த சூர்யா, சிவகார்த்திகேயன்!
சென்னை: நடிகரும், தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய், 'ஜன நாயகன்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை கே.வி.என். புரொடக்ஷன் தயாரித்துள்ளது. விஜய்யின் அரசியல் வருகையால் இந்த படம் தான் அவரின் கடைசி படம் என்பதால் இந்த படத்தை அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.படம் சென்சார் பிரச்சனை காரணமாக வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று ஜன நாயகன் படத்தின் சில காட்சிகள் இணையத்தில் லீக்கான நிலையில், இன் அதிகாலை முழுபடமும் இணையத்தில் வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதை பலரும் கண்டித்து வருகின்றனர்.
சூர்யா கண்டனம்: நடிகர் சூர்யா தனது எக்ஸ் தள பக்கத்தில், இதயத்தை நொறுக்கிவிட்டது. அநீதியான ஒரு நிகழ்வு இது. ஒரு முழுப் படக்குழுவின் பேரார்வம் இறுதியில் இப்படிச் சீரழிக்கப்பட்டுவிட்டது. உங்கள் அனைவரையும் நான் மிகுந்த கேட்டுக்கொள்கிறேன்: தயவுசெய்து இந்தப் படத்தை இங்கே பார்க்கவோ, பகிரவோ அல்லது விவாதிக்கவோ வேண்டாம். அவர்களின் உழைப்பை மதித்திடுங்கள். நான் என் நண்பர்களுக்குத் துணையாக நிற்கிறேன்; இந்தச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். இது ஒருபோதும் மன்னிக்க முடியாத குற்றம் என பதிவிட்டுள்ளார்.
சிவகார்த்திகேயன்: அதே போல சிவகார்த்திகேயனும் கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில், ஒவ்வொரு திரைப்படமும் நூற்றுக்கணக்கான மக்களின் பேரார்வம். இரத்தம் மற்றும் வியர்வையால் உருவாக்கப்படுகிறது; தயவுசெய்து திருட்டுத்தனத்தை தவிருங்கள். திரையரங்குகளில் படம் வெளியாகும் வரை காத்திருந்து, அங்கே சென்று... பாருங்கள். இதற்குப் பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.... திறமையாளர்களை மதியுங்கள்... கடின உழைப்பை மதியுங்கள்... சினிமா துறையை மதியுங்கள்... என்று தெர்வித்துள்ளார்.

மௌனம் காப்பது ஏன்: இவர்கள் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர் தனஞ்செயன், சுரேஷ் காமாட்சி, சிபிராஜ், கார்த்தி,ஜிவி பிரகாஷ், சிரஞ்சீவி ஆகியோர் கண்டனம் தெரிவித்து இருக்கும் நிலையில், ஆனால், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது ரஜினிகாந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில் ஜன நாயகன் படம் இணையத்தில் கசிந்ததை வன்மையாக கண்டித்து ட்வீட் போட்டுள்ளார். அதில், ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் யாராலோ வெளியிடப்பட்டிருப்பது அதிர்ச்சியையும்,வேதனையையும் அளிக்கிறது. திரை அமைப்புகள் இதற்கு எதிராகக் குரல் எழுப்பி, அரசு இதைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். இது போன்ற குற்றம் இனியும் தொடரக்கூடாது என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











