Rajinikanth: ரசிகர்களின் வேண்டுதல் வீண் போகல.. நலமோடு வீடு திரும்பிய தலைவர்.. உற்சாகத்தில் தமிழ்நாடு
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தத் தகவல் தெரிந்ததும் அவரது ரசிகர்கள் தொடங்கி திரைத்துறையினர் வரை பலரும் அதிர்ச்சியாகினர். மருத்துவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்த அறிக்கை வெளியிட்டாலும், சுகாதாரத்துறை அமைச்சர் நேரடியாக மருத்துவர்களிடம் பேசி செய்தியாளர்களிடம் விளக்கினாலும், ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை என்றே கூறலாம்.
இதனால் ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தினர். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று அதாவது அக்டோபர் 3ஆம் தேதி இரவு 11 மணிக்கு வீடு திரும்பினார். இது தொடர்பான தகவல்கள் வெளியானதும் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் வேட்டையன். இந்தப் படம் வரும் 10ஆம் தேதி அதாவது அடுத்த வாரம் வியாழக்கிழமை ரிலீஸ் ஆகவுள்ளது. மேலும் இவர் கூலி படத்தில் நடித்தும் வருகின்றார். இப்படியான நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல்நிலைக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பான தகவல்கள் வெளியானதும் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். குறிப்பாக சூப்பர் ஸ்டாருக்கு என்ன ஆச்சு? இப்ப எப்படி இருக்காரு? எப்போ வீடு திரும்புவார் உள்ளிட்ட பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டு இருந்தனர்.

மருத்துவர்கள் அளித்த அறிக்கையின்படி, " இதயத்தில் இருந்து வெளியேறும் ரத்த நாளத்தில் வீக்கம் இருந்ததாகவும், அதனை அறுவைச் சிகிச்சை செய்து அகற்றாமல், transcatheter முறையில் அந்த ரத்த நாளத்தில் stent பொருத்தப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அவரது உடல்நிலை சீராக இருப்பதால் அவர் நலமாக உள்ளார் எனவும், இரண்டு நாட்களில் வீடு திரும்புவார்" எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அமைச்சர்: அதேபோல் அமைச்சர் மா. சுப்ரமணியம் தெரிவிக்கையில், வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகத்தான் அவர் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். காலையில் வெறும் வயிற்றுடன் சில மருத்துவ சோதனைகள் செய்யவேண்டி இருப்பதால், காலையில் வீட்டில் இருந்து கிளம்பி மருத்துவமனைக்கு வருவது சௌகரியமாக இருக்காது. எனவே, ஒரு நாள் முன்னரே மருத்துவமனைக்கு வந்துள்ளார். அவரது உடல்நிலை குறித்து நாங்களும் தொடர்ந்து விசாரித்து வருகின்றோம். யாரும் பயப்படவேண்டாம்" எனத் தெரிவித்தார்.

ரசிகர்கள்: சூப்பர் ஸ்டாருக்கு உடல்நிலை சரியில்லை என்றதும், அவரது ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு கோவில்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். குறிப்பாக சென்னை வடபழனி கோவில் தொடங்கி, பழனிமலை முருகன் கோவில் வரையிலும், சென்னை வடிவுடையம்மன் கோவில் தொடங்கி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வரையிலும் என தமிழ்நாடு முழுவதும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. மகள் சௌந்தர்யா தனது கணவருடன் சென்னை வடிவுடையம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார். இந்நிலையில் மருத்துவர்கள் கூறியதுபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று இரவு 11 மணிக்கு வீடு திரும்பியுள்ளார். இந்தத் தகவல் சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் தகவலாக உள்ளது. மேலும் திரைத்துறையினருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications











