ஜெயலலிதா பிறந்தநாள்.. போயஸ் கார்டனில் ரஜினிகாந்த்.. நான்காவது முறையாக வருகிறேன்!
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாளை அதிமுக தொண்டர்கள் மட்டுமின்றி அவரது தீவிர விசுவாசிகளும் அவரது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர். இந்த நாளில், போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்திற்கு வந்த ரஜினிகாந்த், அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 1948ம் ஆண்டு கர்நாடகா மாநிலம் மாண்டியாவில் பிறந்தார். கன்னட திரைப்படமான "ஶ்ரீ சைலா மகாத்மே" படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 1965ம் ஆண்டு ஶ்ரீதரின் 'வெண்ணிற ஆடை' படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

பத்தாம் வகுப்பு வரை படித்திருந்த ஜெயலலிதா, புத்தகத்தின் மீது ஆர்வம் மிகுந்தவராக இருந்தார். படப்பிடிப்பு தளத்தில் எப்போதும் புத்தகத்துடனே காணப்பட்ட ஜெயலலிதா, தமிழ் நாட்டில் ஆளுமை மிக்கவராக மாறினார். அரசியலில் நுழைந்த அவர், அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளர், பின் மாநிலங்களவை உறுப்பினராக உயர்ந்து அதிமுகவின் பொதுச் செயலாளராகவும் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராகவும் 6 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இருந்தார்.
ஜெயலலிதா 77வது பிறந்த நாள்: இன்று மறைந்த முன்னாள் முதல்வர் செல்லி ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாள் இன்று அதிமுக கொண்டர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில், காமராசர் சாலையில் உள்ள ஜெ.ஜெயலலிதா வளாகத்தில் தமிழக அரசின் சார்பில் அவரின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். அதிமுக தொண்டர்கள் மட்டுமில்லாமல், ஜெயலலிதாவின் விசுவாசிகளும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
வேதா இல்லத்தில் ரஜினி: இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த், சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்திற்கு சென்று ஜெயலலிதாவின் படத்திற்கு மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, இந்த போயஸ் கார்டன் வீட்டுக்கு நான் நான்காவது முறையாக வருகிறேன். ஜெயலலிதாவுடன் நான் ஒரு படத்தில் சேர்ந்து நடிப்பதாக இருந்தது. அவர் என்னை பார்க்க வேண்டும் என்று கூறியிருந்தார். அப்போது முதல் முறையாக அவரை சந்தித்து பேசினேன். இரண்டாவது முறை என்னுடைய ராகவேந்திரா திருமண மண்டப திறப்பு விழாவுக்கு அழைப்பதற்காக வந்திருந்தேன். அதன் பிறகு என் மகளின் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்க வந்தேன். இப்போது, நான்காவது முறையாக வருகிறேன். ஜெயலலிதா மறைந்தாலும் அவருடைய நினைவுகள் என்றென்றும் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும். அவர் வாழ்ந்த வீட்டில் அவருக்கு அஞ்சலி செலுத்த வந்திருக்கிறேன் என்றார்.


Click it and Unblock the Notifications











