Vettaiyan: வேட்டையன் படம் எப்படி இருக்கு? விஜய் - சூர்யா ரசிகர்கள் வைக்கும் விமர்சனம் உண்மையா?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இன்று அதாவது அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகியுள்ள படம் வேட்டையன். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. படத்தினை திரைப்பிரபலங்கள் பலரும் பார்த்து கொண்டாடி வருகின்றனர். படம் பார்த்த ரசிகர்கள் பலரும் படத்தை பாராட்டி வருகின்றனர். விமர்சகர்களும் படத்தை பாராட்டி வருகின்றனர். மேலும் படம் நீட் தேர்வு மரணங்கள் குறித்தும் பேசுவதாக பல ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் படத்திற்கு விஜய் மற்றும் சூர்யா ரசிகர்களும் சமூக வலைதளத்தில் விமர்சித்து வருகின்றனர். அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
வேட்டையன் படத்தினை ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள அவரது 170வது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவல் ஏற்பட்டது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன்,மலையாள சினிமாவின் நடிப்பு அரக்கன் ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் , ராணா டகுபதி , அபிராமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படக்குழு சார்பில் ஏற்கனவே வெளியிடப்பட்ட மனசிலாயோ பாடலும் ஹண்டர் வன்ட்டார் பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இணையத்தில் எங்கு திரும்பினாலும் ரசிகர்கள் தொடங்கி திரைப்பிரபலங்கள் வரை அனைவரும் மனசிலாயோ பாடலுக்கு ரீல்ஸ் நடனம் ஆடி வெளியிட்டு பாடலை உலக அளவில் ட்ரெண்ட் செய்தனர். இந்த பாடல் படத்தினை மக்கள் மத்தியில் வெகு எளிமையாகக் கொண்டு செல்ல முக்கிய காரணமாக இருந்தது.
ரசிகர்கள் கருத்து: படம் பார்த்துவிட்டு வந்த பல ரசிகர்கள் படம் நன்றாக உள்ளது. படத்தில் மிகவும் முக்கியமான சமூகக் கருத்து பேசப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள அனைவரும் இந்தப் படத்தை பார்க்கவேண்டும். படத்தில் நீட் தேர்வு மரணங்கள் குறித்து பேசப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட பல விமர்சனங்களை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் படத்தில் துஷாராவின் கதாபாத்திரம் மிகவும் முக்கியமான மற்றும் வலுவான கதாபாத்திரமாக அமைக்கப்பட்டுள்ளது என பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக பல மாஸ் சீன்களும் இடம் பெற்றுள்ளது என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

வன்மம்: இந்நிலையில் படம் குறித்து நேற்றில் இருந்தே இணையத்தில் விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் வன்மத்தைக் கக்கி வந்தனர். குறிப்பாக வேட்டையன் டிசாஸ்ட்டர் என எக்ஸ் பக்கத்தில் ட்ரெண்ட் செய்தனர். மேலும் இன்றும் படம் குறித்து மிகவும் மோசமான விமர்சனங்களையே முன் வைத்து வருகின்றனர். சில விமர்சகர்களும் ரஜினிகாந்த்தை பிடிக்காது என்பதால் வேண்டுமென்றே படம் குறித்து தவறான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர் என பலரும் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தவறான விமர்சனம்: விஜய் ரசிகர்கள் கடந்த சில ஆண்டுகளாவே ரஜினியையும் அவரது ரசிகர்களையும் சீண்டி வருகின்றனர். இதனால் இவர்களுக்கு இணையத்தில் அவ்வப்போது வாக்குவாதம் ஏற்படும். அதேபோல் அக்டோபர் 10ஆம் தேதி முதலில் கங்குவா ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால் வேட்டையனும் அதே தேதியில் ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டதால் கங்குவா நவம்பருக்கு தள்ளிப்போனது. இது சூர்யா ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்ததால், அவர்களும் வேட்டையன் படம் குறித்து தவறான விமர்சனங்களை முன்வைத்து வருவதாக படம் பார்த்தவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











