Vettaiyan: தலைவரின் அடுத்த சம்பவம்! பாக்ஸ் ஆஃபீஸ் வேட்டையை தொடங்கிய வேட்டையன்.. திணறும் இணையம்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் படம் வரும் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் ரிலீஸ் வேலைகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. லைகா நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. லைகா நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாகவே மாபெரும் வசூல் ஹிட் கொடுக்க முடியாமல் திணறி வருவதாக சினிமா வட்டாரத்தில் ஒரு பேச்சு உள்ளது. ஏற்கனவே பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்கள், இந்தியன் 2 படங்கள் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் லைகா நிறுவனம் மகிழ்ச்சி அடையும் விதமாக வேட்டையன் படத்திற்கான டிக்கெட் முன் பதிவு அமைந்துள்ளது. அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல் வேட்டையன் படம் வரும் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தினை ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கியுள்ளார். படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுமட்டும் இல்லாமல் படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக மனசிலாயோ பாடல் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதேபோல் ஹண்டர் வண்டார் பாடல் ரஜினியின் தீவிர ரசிகர்களின் ரிங்டோனாகவே மாறிவிட்டது.

படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் ராணா டகுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். அனிருத் தான் இசை அமைக்கும் ஒரு படத்திற்கு முழுவதுமாக பின்னணி இசைக்கோர்ப்பு பணிகளை முடித்த பின்னர், படம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். இந்நிலையில் அவர் வேட்டையன் படம் குறித்து பதிவிட்டுள்ளது ரசிகர்களை உற்சாகமடையச் செய்தது.

ப்ரீ புக்கிங்: இந்நிலையில் இன்று முதல் அதாவது அக்டோபர் 6ஆம் தேதியில் இருந்து படத்தின் டிக்கெட் புக்கிங் தொடங்கியுள்ளது. டிக்கெட் புக்கிங் தொடங்கியதால் ரசிகர்கள் வேகமாக டிக்கெட் புக் செய்தனர். இதனால் பல காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் முழுவதும் விற்றுத் தீர்ந்தது. இன்னும் சொல்லப்போனால், படம் ரிலீஸ் ஆகும் முதல் நாளுக்கான அனைத்து காட்சிகளும் புக் ஆகிவிட்டது. இந்த புக்கிங் சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டும் இப்போது நடைமுறைக்கு வந்துள்ளது. சென்னையில் உள்ள பெரும்பாலான தியேட்டர்களில் முதல் நாள் காட்சிகள் புக் ஆகிவிட்டது. தி நகரில் உள்ள ஏ.ஜி.எஸ் திரையரங்கில் மதியம் 12 மணிக்கு மேல் தொடங்கி இரவு 10.55 வரையிலான காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் ஒன்று கூட விடாமல் விற்றுத் தீர்ந்துவிட்டது.

வசூல் வேட்டை: அதேநேரத்தில் இந்த புக்கிங் அனைத்தும் 10ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு மேலான காட்சிகளுக்குத்தான் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வேட்டையன் படத்தின் ரிலீஸ்க்கு சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி கொடுத்தால் அதற்கு ஏற்றவாறு முதல் காட்சியை திட்டமிட்டுக் கொள்ளலாம் என திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்து இவ்வாறு செய்திருப்பதாக கூறப்படுகின்றது. வேட்டையன் படம் ப்ரீ புக்கிங்கிலேயே தமிழ்நாட்டில் வசூல் சாதனை படைக்கும் என கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications











