இளம் ஹீரோக்கள் ரூட்டில் ரஜினி… தெலுங்கு இயக்குநருடன் கூட்டணி வைக்க முடிவு… பரபரக்கும் கோலிவுட்….
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.
ஜெயிலர் படத்தை முடித்துவிட்டு லைகா நிறுவனம் தயாரிக்கும் இரண்டு படங்களில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாகக் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் படங்களின் இயக்குநர்கள் யார் யார் என ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர்
ஜெயிலர் படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், தனது அடுத்த படங்கள் குறித்தும் இப்போதே பிஸியாக காணப்படுகிறார். ஜெயிலர் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருவதால், அதனை முடித்துவிட்டு உடனடியாக அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட ரெடியாகிவிட்டாராம். முக்கியமாக ரஜினி அடுத்து நடிக்கவுள்ள இரண்டு படங்களையும் லைகா தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக ரஜினிக்கு 300 கோடி ரூபாய் வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இளம் ஹீரோக்கள் ரூட்டில் ரஜினி
ரஜினியின் அடுத்த படங்களான தலைவர் 170, தலைவர் 171 இயக்குநர்கள் குறித்து செய்திகள் வெளியாகி வருகின்றன. அதன்படி, முதலில் மணிரத்னம், சிபி சக்கரவர்த்தி, தேசிங்கு பெரியசாமி அல்லது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இவர்களில் ஒருவர் இயக்கலாம் என கூறப்பட்டது. ஆனால், தற்போது இந்த வரிசையில் தெலுங்கு இயக்குநர் ஒருவரின் பெயரும் இணைந்துள்ளது. விஜய், சிவகார்த்திகேயன் போன்ற இளம் ஹீரோக்கள் தெலுங்கு இயக்குநர்களின் படங்களில் நடித்து வருகின்றனர். ரஜினியும் அவர்களது ரூட்டில் ஒரு தெலுங்கு இயக்குநரிடம் கதை கேட்டுள்ளாராம்.

பிம்பிசாரா இயக்குநர்
தெலுங்கில் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி வெளியான பிம்பிசாரா திரைப்படம் ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை மல்லிடி வசிஸ்தா இயக்குநர் இயக்கியிருந்தார். இளம் இயக்குநரான மல்லிடி வசிஸ்தாவுக்கு இதுதான் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. நந்தமுரி கல்யாண் ராம், சம்யுக்தா மேனன், கேத்ரின் தெரசா, ஸ்ரீனிவாச ரெட்டி ஆகியோர் நடிப்பில் வெளியான இந்தப் படத்தின் மேக்கிங், திரைக்கதை என படம் முழுக்க மாஸ் காட்டிவிட்டார் மல்லிடி வசிஸ்தா. இதனால், தெலுங்கு திரையுலகம் மட்டுமின்றி பல முன்னணி நடிகர்களின் பார்வை இவரின் மேல் விழுந்துள்ளது.

ரஜினிக்கு கதை ரெடி
இதனால் மல்லிடி வசிஸ்தா அடுத்ததாக யாரை இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த தருணத்தில் தான் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து கதை கூறியுள்ளார் அவர். அந்தக் கதை சூப்பர் ஸ்டாருக்கு பிடித்து விட்டதாகவும், விரைவில் படப்பிடிப்பை தொடங்கி விடலாம் என க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால் விரைவில் ரஜினிகாந்தும் 'பிம்பிசாரா' இயக்குநர் மல்லிடி வசிஸ்தாவும் இணையும் படம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











