ஏழைகளுக்கு பால் பாக்கெட்... ரஜினி ரசிகர்களின் புது சவால்!
உலகமெங்கும் ஐஸ் பக்கெட் குளியல், ரைஸ் பக்கெட் தானம், மரம் நட்டு தண்ணீர் ஊற்றுதல் போன்ற சவால்கள் பிரபலமாகி வருகின்றன.
இவை அனைத்துமே ஏதோ ஒரு நல்ல காரியத்துக்காக செய்யப்படுபவை என்பதால் மக்களின் ஆதரவும் பெருகுகிறது.
இதையெல்லாம் பார்த்த ரஜினி ரசிகர்கள் ஒரு புது சவாலை அறிவித்துள்ளனர். அதுதான் பால் பாக்கெட் வழங்குவது. எத்தனையோ ஏழைக் குடும்பங்கள் காலையில் பால் வாங்க வழியில்லாமல் தவிக்கின்றனர்.
அவர்களுக்கு பால் பாக்கெட் வாங்கித் தருவதுதான் இந்த சவால்.

பால் பாக்கெட்டுகள்
நேற்று இதனை சமூக வலைத்தளங்களில் கார்த்திக் என்ற ரசிகர் முதலில் ஆரம்பிக்க , உடனடியாக சக ரசிகர்கள் செயலிலும் இறங்கினர். அந்தந்தப் பகுதியில் உள்ள ரசிகர்கள், தங்களால் இயன்ற அளவு பால் பாக்கெட்டுகளை வாங்கி ஏழைக் குடும்பங்களுக்கு பரிசளித்தனர்.

சூப்பர் ஸ்டார் ஃபேன்ஸ் சேலஞ்ச்
அந்தப் புகைப்படங்களை பேஸ்புக்கில் வெளியிட்டு, சக ரசிகர்கள் மற்றும் பொது மக்களையும் இதே போன்று செய்யுமாறு சவாலுக்கு அழைத்துள்ளனர். இந்த சவாலுக்கு சூப்பர் ஸ்டார் ஃபேன்ஸ் சேலஞ்ச் எனப் பெயரிட்டுள்ளனர்.

விதி
சேலென்ஜில் நாமிநேட் செய்யப்பட்டவர்கள் அடுத்த 48 மணி நேரத்தில், தங்கள் பகுதியில் உள்ள ஏழ்மையான ஒருவருக்கோ அல்லது ஒன்றுக்கும் மேற் பட்டவர்களுக்கு ஏதேனும் ஒரு நன்கொடை (உணவு, புத்தகம், பால், உடை) வழங்க வேண்டும் என்பதுதான் இதன் ஒரே விதி.

அறிவித்த உடன் ஆக்ஷனில் இறங்கிய ரசிகர்கள்
இந்த சேலஞ்ச் ஆரம்பிக்கப்பட்ட ஒரே நாளில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் தங்கள் பகுதியில் உள்ள ஏழை மக்களுக்கு பால், உணவு, உடை என வாங்கிக் கொடுத்து அசத்தியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











