Vettaiyan Day 10 Box Office: 10வது நாளில் திணறுதா திணறடிக்குதா? வேட்டையன் பாக்ஸ் ஆஃபீஸ் நிலவரம் இதோ
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 10ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் வேட்டையன். இந்தப் படத்தினை ஞானவேல் இயக்கியுள்ளார். படத்தினை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தில் சூப்பர் ஸ்டாருடன், அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.
படம் வெளியாகி நேற்றுடன் அதாவது அக்டோபர் 19ஆம் தேதியுடன் 10 நாட்கள் ஆகின்றது. இந்நிலையில் படத்தின் வசூல் எந்த அளவிற்கு உள்ளது என்பது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

வேட்டையன் படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 170வது படம். படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்து படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டது. காரணம், படத்தின் இயக்குநர் ஞானவேல் என்பதால்தான். இந்தப் படத்தில் அவர் என்ன மாதிரியான சமூகக் கருத்தினைக் கூறப்போகின்றார் என்ற ஆவல் அனைவருக்கும் ஏற்பட்டது. இவரது முதல் படமான ஜெய் பீம் சமூகத்தில் மட்டும் இல்லாமல், அரசு சில நலத்திட்டங்களை அறிமுகம் செய்யும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியது.

இப்படியான நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில் போன்ற ஜாம்பவான்கள் இந்தப் படத்தில் இருப்பதால் ரசிகர்களுக்கு பெரும் ஆவல் ஏற்பட்டது. குறிப்பாக ஃபகத் ஃபாசில் கதாபாத்திரம் எப்படி இருக்கும்? ஃப்கத் ஃபாசில்தான் வில்லனா? என்பது போன்ற கேள்விகளை ரசிகர்கள் கேட்டுக் கொண்டே இருந்தனர்.

அனிருத்: ஏற்கனவே ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டாருக்காக அனிருத் வேற லெவலில் இசை அமைத்து அசத்தியிருந்தார். குறிப்பாக பின்னணி இசையில் மொரட்டுத்தனமான அமைத்திருந்தார். சூப்பர் ஸ்டாரின் ஒவ்வொரு மாஸ் காட்சிகளுக்கும் அனிருத்தின் பின்னணி இசையையும் தியேட்டரில் பார்க்கும்போது பலருக்கும் உடல் சிலிர்த்தது. இதுமட்டும் இல்லாமல், இசை வெளியீட்டு விழாவில் நரம்பு புடைக்க பாடியிருந்தார். இதனால் வேட்டையன் படத்திற்கு என்ன மாதிரி இசை அமைக்கப்போகின்றார் என்ற கேள்வி அனைவருக்கும் ஏற்பட்டது. அனைவரின் ஆசையையும் பூர்த்தி செய்யும் வகையில் அனிருத்தின் இசை அட்டகாசமாக அமைந்தது. குறிப்பாக மனசிலாயோ பாடல் உலகம் முழுவதும் பாப்புலர் ஆனது.

மனசிலாயோ: இந்தப் பாடலை இதுவரை யூட்யூப் தளத்தில் மட்டும் 7 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் ரீல்ஸ்கள் பதிவிட்டுள்ளனர். இந்தத் தகவலை லைகா நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுமட்டும் இல்லாமல், இப்பாடலின் நடன அசைவுகளும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் பாடல் மட்டும் இல்லாமல், ஹன்ட்டர் வன்ட்டார் பாடல் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

மழை: படம் வெளியாகி நேற்றுடன் 10 நாட்கள் ஆகின்றது. படம் முதல் நான்கு நாட்களில் ரூபாய் 240 கோடிகளை வசூல் செய்ததாக லைகா நிறுவனமே அதிகாரப்புர்வமாக அறிவித்தது. அதன் பின்னர் ஒட்டுமொத்த தமிழ்நாடும் சந்தித்த கனமழை, அதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு என, படம் பார்க்க யாருமே தியேட்டருக்கு வரவில்லை. இதனால் சில காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. மேலும் மிகக் குறைந்த அளவிலான ரசிகர்களைக் கொண்டு படம் திரையிடப்பட்டது. குறிப்பாக அதிக தியேட்டர்களைக் கொண்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மழையினால் கடும் பாதிப்பினைச் சந்தித்தது. இதனால், படத்தின் வசூலும் பெரிதும் பாதிப்புக்குள்ளானது.
வசூல்: மழை ஓய்ந்து மக்கள் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கையை நோக்கி வருவதால் தியேட்டருக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் படத்தின் வசூல் அதிகரித்துக் கொண்டே உள்ளது. படம் 10 நாளில் ரூபாய் 310 கோடிகள் வரை வசூல் செய்திருக்கும் என பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் டிவிட்டரில் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் #Vettaiyan300CroreBOHunt என ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இன்று வார இறுதி நாட்கள் என்பதால் படத்தின் வசூல் இன்று அதிகமாக இருக்கும் என படக்குழு நம்புகின்றது.


Click it and Unblock the Notifications











