இஷ்ட தெய்வம் ராகவேந்திர மடத்தில் ரஜினி சாமி தரிசனம்... தீயாய் பரவும் வீடியோ!
பெங்களூர்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெங்களூரு ஜெயநகர் பகுதியில் உள்ள ராகவேந்திரா மடத்தில் சாமி தரிசனம் செய்தார்.
உலக சினிமாவில் முக்கியமான நடிகராக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவிற்கு வருவதற்கு முன் பேருந்து நடத்துனராக இருந்தார்.

இவரது நண்பர் கொடுத்த உத்வேகத்தால் சென்னை வந்த ரஜினி, இன்று உலகமே கொண்டாடும் நடிகராக இருக்கிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்: நான்கு தலைமுறை நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இன்றைய தலைமுறையினரும் தலையில் தூக்கிவைத்து கொண்டாடி வருகின்றனர். ரஜினி மாஸ் ஸ்டைல் நடிப்பை பார்த்திராத இந்த காலத்து இளசுகள், ஜெயிலர் படத்தைப் பார்த்துவிட்டு, வாயை பிளந்தபடி தலைவரு நிரந்தரம் என்று பாட்டுப்பாடி வருகின்றனர்.

525 கோடி: பான் இந்திய திரைப்படமாக வெளியான இத்திரைப்படம் இதுவரை 525 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. ரஜினிகாந்தின் சினிமா கேரியரில் இதுபோன்ற வசூல் வேட்டை நடந்ததே இல்லை. ஜெயிலர் படம் வெளியாவதற்கு முன் இமயமலை சென்ற ரஜினி, திரும்பி வந்ததும், ஜெயிலர் படக்குழுவினருக்கு சக்சஸ் பார்ட்டி கொடுத்தார்.
பழசை மறக்காத ரஜினி: ஜெயிலர் படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கும் ரஜினி, சினிமாவிற்கு வருவதற்கு முன் பெங்களூரில் நடத்துநராக பணியாற்றிய ஜெயநகர் பேருந்து டிப்போவுக்கு திடீரென சென்றார். அப்போது பணிமனையில் இருந்த ஊழியர்களை சந்தித்து பேசினார். பின்னர் பேருந்து இயக்குனர் மற்றும் நடத்துனருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார். தாம் வேலை செய்த போது நடந்த சம்பவங்களை அங்கிருந்தவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
ராகவேந்திரா மடத்தில்: இதையடுத்து, பெங்களூரு ஜெயநகர் பகுதியில் உள்ள ராகவேந்திரா மடத்தில் சாமி தரிசனம் செய்தார். ரஜினி காந்த் வருகையையொட்டி அங்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. ரஜினிகாந்த் பெங்களூரில் இருக்கும் நிலையில் திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்த லதா ரஜினிகாந்த் ஐந்து கிலோ எடையுள்ள அரங்கநாத பெருமாள் சுவாமி வெங்கல சிலையை வாங்கினார்.


Click it and Unblock the Notifications











